மோடி கிச்சன் சார்பில்.. தாம்பரத்தில் 600 பேருக்கு தினமும் உணவளிக்கும் பாஜக
சென்னை: கிழக்கு தாம்பரம் பாஜக சார்பில் மோடி கிச்சன் உருவாக்கப்பட்டு 41-வது நாளாக தொடர்ந்து தினமும் ஆதரவற்ற 600 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.
Recommended Video
கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஆதரவற்றோர் முதியோர் யாரும் வெளியே செல்ல முடியாத இந்த நேரத்தில் உணவுக்காக அவா்கள் துன்பப்படக் கூடாது என மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அம்மா உணவகம், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சுகாதாரப் பணிகளையும், பசியாற்றும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேலும், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றவும் அரசு அழைப்பு விடுத்தது.
இந்நிலையில் சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பாஜக சார்பில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து மோடி கிச்சனை உருவாக்கி தாம்பரம் நகர பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர், நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் 600 பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
கலந்த சாதம் தயாரித்து தொண்டா்கள் மூலம் பார்சல் செய்து வழங்கி வருகின்றனா். கிழக்கு தாம்பரம் மண்டல பொறுப்பாளர் ஆர். வெங்கடசுப்பிரமணியம் ஏற்பாட்டில், நகராட்சி பொறுப்பாளர் இ.திவாகரன் மற்றும் ஆர்.வி.சாரதி, ராஜா, கே.மூர்த்தி, சதீஷ், சந்திரமௌளி, நடராஜன், ராஜமோகன், ராஜூ, ரமேஷ், ரவி, புருஷோத்தமன், பிரகாஷ் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனா்.
திருச்சியில் ஏழை மக்களுக்கு நிவாரணம் அளித்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி