தாம்பரம் பெருங்களத்தூர் மாறுது.. ஏரியில் உயர்மட்ட பாலம் வருது.. மறைமலைநகருக்கும் குட்நியூஸ்
சென்னை: பெருங்களத்தூர் முதல் மாடம்பாக்கம் சந்திப்பை இணைக்கும் வகையில், தாம்பரம் கிழக்குப் புறவழிச்சாலையின் தொடர்ச்சியாக ராஜகீழ்ப்பாக்கம் ஏரியின் குறுக்கே உயர்மட்டப்பாலம் அமைக்கப்படும். ராஜ கீழ்ப்பாக்கத்தில் இருந்து அகரம்தென் வழியாக பெருங்களத்தூர் மார்க்கத்தில் 1.4 கி.மீ. நீளத்திற்கு தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலம் கட்டப்படும் என்றார்.

தமிழக சட்டசபையில் நேற்று நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு கோரிக்களை எழுப்பினர். அவர்களுக்கு பதில் அளித்த அந்தத் துறையின் அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட புதிய அறிவிப்புகள் முழு விவரம்
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின்கீழ், எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், புறவழிச்சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், ஆற்றுப்பாலங்கள், மழைநீர் வடிகால் கட்டுதல் போன்ற பணிகள் எடுத்துக்கொள்ளப்படும்.
காலநிலை மாற்றங்களால் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கையாளும் விதமாக, அனைத்து காலநிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து திட்டத்தின்கீழ், நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் உள்ள அனைத்து தரைப்பாலங்களும் உயர்மட்டப் பாலங்களாக, 2026-ம் ஆண்டிற்குள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் 84 தரைப்பாலங்கள் உயர்மட்டப்பாலங்களாக கட்டப்படும்.
மறைமலைநகர் மேம்பாலம்
சென்னை அம்பத்தூரில் உள்ள ரயில்வே மேம்பாலம்; செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள கடவு எண்.45; சிங்கபெருமாள் கோவிலில் உள்ள கடவு எண்.49; மேல்மருவத்தூர் ஆகிய ரயில்வே கடவுகளுக்கு மாற்றாக 10 ரெயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும். சேலம் - கொச்சின் சாலையில் மரப்பாலத்தில் ரெயில்வே கீழ்பாலம் கட்டப்படும்.
கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தாண்டு 1,000 கி.மீ. ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள், இதர மாவட்டச் சாலைகளாக தரம் உயர்த்தி மேம்படுத்தப்படும்.
எண்ணூர் கடல்வழி பாலம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எண்ணூரில் இருந்து பூஞ்சேரி வரை கடல்வழியாக இணைக்கும் வகையில் பாலம் அமைக்கவும்; ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திற்கு, ஈரோடு சாலையையும், ஊட்டி சாலையையும் இணைக்கும் வகையில் சாலை அமைக்கவும் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
பெருங்களத்தூர் பாலம்
பெருங்களத்தூர் முதல் மாடம்பாக்கம் சந்திப்பில் இணைக்கும் வகையில், தாம்பரம் கிழக்குப் புறவழிச்சாலையின் தொடர்ச்சியாக ராஜகீழ்ப்பாக்கம் ஏரியின் குறுக்கே உயர்மட்டப்பாலம் அமைக்கப்படும். ராஜ கீழ்ப்பாக்கத்தில் இருந்து அகரம்தென் வழியாக பெருங்களத்தூர் மார்க்கத்தில் 1.4 கி.மீ. நீளத்திற்கு தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும்.

சென்னை பாடி சாலை
சென்னை பாடி அருகே யூ வடிவ சேவை சாலையும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவான்மியூர்-கொட்டிவாக்கம் வரை உள்ள சாலையையும் அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். சென்னை வில்லிவாக்கம் ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் கொரட்டூர் மற்றும் பாடி மார்க்கமாக செல்ல யூ வடிவ சேவை சாலை அமைக்கப்படும். கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் கொட்டிவாக்கம் வரை, 6 வழிச்சாலையாக அகலப்படுத்தப்படும்.
கிழக்கு கடற்கரை சாலை
கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிதாக சுற்றுலா மாளிகைகள் கட்டப்படும். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14.20 கி.மீ. தூரத்திற்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் அமைக்கப்படும்" இவ்வாறு அமைச்சர் எவ வேலு புதிய அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications