காளி நிறம் கருப்புதானே.. ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட "தமிழன்னை" படம்.. சர்ச்சையாக வெடிக்க காரணம் என்ன?
சென்னை: கருமை நிற பெண்.. வெண்மை நிற ஆடை.. காலில் தண்டை.. இடுப்பில் ஒட்டியாணம்.. கழுத்தில் ஆரம்.. கையில் வளைகள், நெற்றியில் குங்குமம்.. மற்றும் மூக்குத்தி அணிந்த ஒரு பெண் தனது கையில் திரிசூலம் போன்ற ஆயுதத்துடன் தலைமுடியை விரித்தபடி ஆவேசமாக ஆடும்படியான ஒரு புகைப்படம்.. அதற்கு கீழே, "தமிழணங்கு" என்று எழுதிய ஒரு வாசகம்..
திரிசூலத்தின் உச்சியில் தமிழ்மொழியின் சிறப்பான "ழகர" எழுத்தும் காணப்படுகிறது. இந்த புகைப்படம் கடந்த சில நாட்களாக ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களை மட்டுமல்லாது, அரசியல் ரீதியாகவும் பெரும் அனலை கிளப்பிவிட்டது.
ஆங்கிலத்தை தவிர்த்துவிட்டு, இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து வெளியிட்டதற்கும், ரஹ்மான் இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுவதற்கும் நேரம் ஒத்துபோனதாலோ என்னவோ தெரியவில்லை.. இசைப்புயலின் இந்த செயலுக்கு எதிராக ஆவேசமான கருத்துக்களும் எதிர்மறை கொந்தளிப்புகள் வந்து சேர்வது வலதுசாரி அமைப்புகளிடமிருந்தும், அவர்களின் ஆதரவாளர்களிடம் இருந்துதான் என்பதை நிரம்பி வழியும் சமூக வலைதளப் பக்கங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன
தம்பி ரஹ்மான்! எல்லாம் சரிதான்! முதல்ல உங்கள் குடும்பத்தார் பெயரை தமிழில் மாற்றுங்க! பாஜக பிரமுகர்
தமிழன்னை வடிவம்
வலதுசாரிகள் முன்வைப்பது ஒரே ஒரு விஷயத்தை.. "தமிழ் அன்னை என்பவள் மிகவும் அமைதியான வடிவத்தில் அமர்ந்து இருப்பதை போன்ற தோற்றம் கொண்டவள்.. இத்தனை வருடங்களாக நாங்கள் அப்படித்தான் பார்த்து இருக்கிறோம். திடீரென்று கருமை நிறத்தில் தலைவிரி கோலமாக ஆவேசமாக இருப்பதுபோன்ற புகைப்படத்தை ஏஆர் ரகுமான் வெளியிடுவது உள்நோக்கம் கொண்டது.." என்று குமுறுகிறார்கள் அவர்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் மீது விமர்சனம்
திருவள்ளுவர் உருவப்படத்திற்கு திருநீறு பூசப்பட்டிருந்ததாகவும், ருத்ராட்சம் அணிந்து, காவி நிற உடையில் இருந்ததாகவும் பிற்காலத்தில் அது வெண்மை நிற ஆடைக்கு மாற்றப்பட்டதாகவும்.. தமிழன்னை உருவத்தையும் வருங்காலத்தில் அதேபோல மாற்றுவதற்கான வழியை ஏஆர் ரகுமான் திறந்து விட்டுள்ளார் என்று வம்படியாக இந்த விஷயத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் வலதுசாரிகள்.
திருவள்ளுவர் காவி
திருவள்ளுவர் உருவ படத்தில் மாறுபாடு ஏற்பட்டதாக அவர்கள் கூறினாலும் அப்படியெல்லாம் கிடையாது அவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது திமுக ஆதரவாளர்கள் மற்றும் இடதுசாரி கருத்தாக இருக்கிறது. நீண்ட நெடுங்காலமாக லியோனி பட்டிமன்றம் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்த விவாதம். இதில் புதிதாக சேர்ந்துள்ளது தமிழன்னை வடிவம். விஷயத்துக்கு வருவோம்.. தமிழன்னை கருப்பாக இருக்க மாட்டாளா? வெண்மை நிறத்தில் அமர்ந்த நிலையில்தான் இருப்பாளா என்பதுதான் ஏஆர் ரகுமான் பகிர்ந்த படத்திற்கு ஆதரவாக கருத்து கூறுவோரின் ஒரே கேள்வியாக இருக்கிறது.
கொற்றவை தாய்
தமிழர்கள் ஐந்து வகை நிலங்களுக்கும், ஐந்து வகை தெய்வங்களை வணங்குபவர்கள். அதில், பாலை நிலத்தின் தெய்வமாக வணங்கப்படுபவர் கொற்றவை, அதாவது காளி. அவளது உருவம் இப்படித்தான் இருக்கும். எனவே தமிழ் அன்னையின் உருவம் இப்படி இருப்பதில் எந்த சர்ச்சையும் தேவை கிடையாது, இது ஆங்கார கொற்றவையின் ஆவேச கோலம் என்கிறார்கள் இந்த படத்திற்கு ஆதரவாக கருத்து சொல்பவர்கள்.
குலசை ஆவேச காளி
கொற்றவை வழிபாடு காலம் வரை கூட போக வேண்டியதில்லை.. இப்போதும், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவின் போது, காளி வேஷம் போடுபவர்கள் சடைமுடி, கோரப் பற்கள், கருமை வண்ணம் பூசி தான் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். எனவே இது இந்த மண்ணின் மைந்தர்களின் வழிபாட்டு முறை, அவர்கள் தங்கள் தாயை இந்த வடிவத்தில்தான் தரிசனம் செய்து வருகிறார்கள். அதோடு, ஏஆர் ரகுமான் உருவப்படம் உடன்பட்டு போகிறது. அதில் என்ன தவறு இருக்க முடியும். ஆதி தமிழர்களின் பெரும்பாலானோரின் நிறம் கருப்பு தான். எனவே கொற்றவை அல்லது காளி என தெய்வ வழிபாடு மட்டுமல்ல கடவுள் மறுப்பாளர்கள் கூட நிற அடிப்படையில் இந்த உருவப் படத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்பது அவர்களது முன் வைக்கும் வாதமாக இருந்து வருகிறது. தென் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் கும்பிடும் பேச்சியம்மன், வெண்ணிற ஆடை உடுத்துபவராக வணங்கப்படுகிறார். எனவே வெண்ணிற ஆடை என்பது வணக்கத்துக்குரிய தெய்வம் அணியும் ஆடை என்று அடித்துச் சொல்கிறார்கள் அவர்கள். ஆனால் வலதுசாரிகள் வாதம் வேறு மாதிரி இருக்கிறது.
வெண்ணிற ஆடை
சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடையுடன் அமர்ந்து இருக்கிறார்.. எனவே தமிழன்னை அந்த ஆடையை அணிந்து இருப்பதில் தவறு கிடையாது என்று கூறுகிறார்கள் இடதுசாரிகள்.. ஆனால் சரஸ்வதிதேவி தாமரை பூவின் மீது சாந்தமாக அமர்ந்து வீணை வாசிக்கும் தோரணையில் இருப்பார். எனவே நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். இங்கு வெண்ணிற ஆடை அணிந்த பெண் அதுவும் தலைவிரிகோலமாக ஆவேச நடனமாடுவது போன்ற தோற்றத்தைதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் தலையை விரித்துப் போடுவது என்பது மங்கலமான செயல் அல்ல என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்துள்ளது என்கிறார்கள் அவர்கள்.
தமிழன்னை கோவில்
அதுமட்டுமல்ல.. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் மணி மண்டப வளாகத்தின் தெற்கே, தமிழன்னைக்கு கோவில் அமைந்திருக்கிறது. 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி தமிழ் தாய் கோயிலுக்கு அடிக்கல் விழா நடைபெற்றது. அப்போது கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி கோவில் திறக்கப்பட்டு தமிழ் தாய்க்கு வழிபாடு நிகழ்ந்து வருகிறது. கருவறையில் உள்ள தமிழ்த்தாய், நான்கு கைகளுடன், தாமரை பீடத்தில் அமர்ந்து காட்சி அளிக்கிறாள். சேர, சோழ, பாண்டியர்கள் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான, வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த்தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ் தாயின் வலது கால் கீழே தொங்கியவாறு, இடது கால் மடித்த நிலையிலும் உள்ளது. இப்படித்தான் கருணாநிதி அடிக்கல் நாட்டிய கோவிலில் தமிழன்னை அமர்ந்திருக்கிறார். ஆனால், இப்போது திமுகவினர் ஆவேச நடனமாடும் ஒரு புகைப்படத்தை காட்டி இதை தமிழன்னை என்று அடித்து சொல்வது முரணாக இருக்கிறது என்கிறார்கள் வலதுசாரியினர்.
Recommended Video
இதுக்கு இல்லையா என்டு
இரு தரப்பும் தங்கள் வாதங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வருகின்றனர். இதற்கெல்லாம் தமிழறிஞர்கள் தான் விடை கூற வேண்டும் என்று நடுநிலையாளர்கள், நடுவே ஓடி வந்து குமுறலோடு கூறுவதையும் பார்க்க முடிகிறது. தமிழன்னை என்று ரஹ்மான் கூறாத நிலையிலும், அது சார்ந்த விவாதங்கள் சூடிபிடித்தபடிதான் உள்ளன. ஏஆர் ரஹ்மானின் மதத்தை இழுத்து விமர்சனம் செய்யும் அளவுக்கும் போய்விட்டனர் பாஜக பிரமுகர்கள். எது எப்படியோ, நமது நாட்டில் தினமொரு சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சமில்லாமல் மக்களின் வாழ்க்கைப் பயணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.