நகைச்சுவை நடிகர் ஜெயமணி சென்னையில் திடீர் கைது.. நீதிபதியை திட்டி அடிக்க பாய்ந்ததால் அதிரடி
சென்னை: சென்னையில் நீதிபதியை ஆபாசமாக திட்டி தாக்க முயன்றதாக தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வரும் நடிகர் ஜெயமணி மற்றும் அவரது நண்பரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் ஜெயமணி. பார்ப்பதற்கு நடிகர் செந்தில் மாதிரியே தோற்றமளிப்பார். லக்கி மேன் உள்பட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார்.

தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த 18 ம் தேதி நடிகர் ஜெயமணியும் அவரது நண்பர் மாரிமுத்துவும் சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மால் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவுக்கு சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் பூங்காவில் சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவரும், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் 7 வது நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுமான திருமால் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். இந்த வேளையில் நடிகர் ஜெயமணி, தனது நண்பர் மாரிமுத்துவுடன் சேர்ந்து நீதிபதி திருமாலை திட்டியுள்ளனர். ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதோடு அவர்கள் மாஜிஸ்திரேட் நீதிபதி திருமாலை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாஜிஸ்திரேட் திருமால் சார்பில் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் மீது மொத்தம் 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 341 (சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்), 294(பி) ( ஆபாசமாக திட்டுதல்), 506(1) (மிரட்டல் விடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து ஆகியோரை கிண்டி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட பிரிவுகள் அனைத்தும் காவல் நிலைய ஜாமீனுக்கு உட்பட்டதாகும். இதையடுத்து ஜெயமணி மற்றும் அவரது நண்பரை காவல் நிலைய ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications