தமிழகத்தில் மார்ச் 13ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு..ஏப்.6ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - அன்பில் மகேஷ்
சென்னை: 10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 14 ஆம் தேதியும் நடைபெறும் எனவும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி மாணவர்கள்தான். கடந்த 2019 - 2020, 2020- 2021ஆம் கல்வி ஆண்டுகளில் பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படவில்லை. மாணவர்கள் ஆல்பாஸ் செய்யப்பட்டனர்.
பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களிலும் மதிப்பெண்கள் தெரிவிக்கப்படாமல் பாஸ் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.

கொரோனா அச்சுறுத்தல்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. அவ்வப்போது கொரோனா அச்சுறுத்தல் எழுந்தாலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நிச்சயம் பொது தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியாக கூறினார். பள்ளி மாணவர்கள் அனைவரும் கொரோனா தொற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

நேரடி வகுப்புகள்
கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற்றன. திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்பட்டு பின்னர் 2022ஆம் ஆண்டுக்கான 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் முதல் பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. ஜூன் மாதத்தில் ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. உயர்கல்விக்காக கலந்தாய்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. விரைவில்

2022-2023 ஆம் கல்வி ஆண்டு
2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு காலாண்டு தேர்வுகளும் மாதாந்திர தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன.

பொதுத்தேர்வு அட்டவணை
இந்நிலையில்,10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்க உள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications