Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இருந்தாலும் இந்த பில்டப் ஆகாது..எத்தனை நாளைக்கு இழுத்தடிப்பார் பிரேமலதா? குமுறும் கேப்டன் சொந்தங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என நான்கு முனைப் போட்டி உருவாகி இருக்கும் சூழலில், பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணிகளை ஓரளவுக்கு உறுதி செய்து விட்டன. ஆனால் ஒரு காலத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக மட்டும், எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என்ற முடிவை எடுக்க முடியாமல் அரசியல் இழுபறியில் சிக்கித் தவிக்கிறது.

''எங்களுக்கு எல்லாருமே தோழமை கட்சிகள்தான். நாங்கள் சேரும் கூட்டணியே ஆட்சி அமைக்கும். தேமுதிக இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது'' என பிரேமலதா விஜயகாந்த் வெளியிடும் கூற்றுகள் திமுக, அதிமுக இரு தரப்பினரிடமும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் களம் நாளுக்கு சூடாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இத்தகைய பேச்சுகள் தேமுதிகவுக்கு சாதகமாக இல்லாமல், மாறாக வாய்ப்புகளை இழக்கும் நிலையை உருவாக்குகிறது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து.

DMDK Tamil Nadu Assembly Election 2026 Premalatha Vijayakanth

2026 தேர்தல்

விஜயகாந்த் தலைமையில் தொடங்கப்பட்ட தேமுதிக, ஆரம்ப காலங்களில் தமிழக அரசியலில் வேகமாக வளர்ந்த இயக்கமாக இருந்தது. 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் கிடைத்த வெற்றி அந்தக் கட்சிக்கு உறுதியான அடித்தளமாக அமைந்தது. தொடர்ந்து 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களில் வெற்றி பெற்று, சட்டப்பேரவையில் அஎதிர்க்கட்சியாக மாறியது. அப்போது தேமுதிக தமிழக அரசியலின் மாற்று சக்தியாகவே பார்க்கப்பட்டது. ஆனால் 2016 தேர்தலில் 'மக்கள் நல கூட்டணி' என்ற புதிய அரசியல் முயற்சியில் இறங்கியதே தேமுதிகவின் அரசியல் பாதையை தலைகீழாக மாற்றியது.

தேமுதிக அரசியல்

அதன் பின்னர் வந்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த கட்சி, ஒரு காலத்தில் 8 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த நிலையில், இன்று ஒரு சதவீதத்திற்கும் கீழ் சரிந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இந்தச் சூழலில், 2026 தேர்தல் தேமுதிகவுக்கு உண்மையிலேயே ஒரு அக்கினி பரீட்சை என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். விஜயகாந்த் மறைவுக்குப் பிறகும், அவருக்கான தனிப்பட்ட செல்வாக்கு தான் தேமுதிகவின் அடிப்படை வாக்கு வங்கியாக இருக்கிறது. குறிப்பாக தெலுங்கு பேசும் மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு, பிரேமலதா மற்றும் விஜய பிரபாகரன் மீதான ஈர்ப்பு ஆகியவை இன்னும் முழுமையாக அழியவில்லை என சொல்லப்படுகிறது.

பிரேமலதா விஜயகாந்த்

ஆனால் அந்த செல்வாக்கை சரியாக அரசியல் பேரமாக மாற்றிக் கொள்ளாமல், தேவையற்ற கோரிக்கைகள் மூலம் வாய்ப்புகளை வீணடிக்கிறார் பிரேமலதா என்ற குற்றச்சாட்டும் வலுவாக முன்வைக்கப்படுகிறது. தற்போதைய சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பினரிடமும் தேமுதிக பேச்சுவார்த்தையைத் தொடங்கும் போதே, 20 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு என்ற நிபந்தனையுடன் தான் பேசுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, முதற்கட்ட பேச்சுவார்த்தையிலேயே இரு பெரிய கட்சிகளும் கதவை சாத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.

தொகுதி பேரம்

அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 6 முதல் 10 தொகுதிகளும், திமுக தரப்பில் 5 அல்லது 6 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என கறாராக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மாநில மாநாட்டில் பிரேமலதாவை துணை முதல்வர் ஆக்குவோம் என எல்.கே.சுதீஷ் பேசியதும், ''நாங்கள் இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது'' என பிரேமலதா, விஜய பிரபாகரன் தொடர்ச்சியாக பேசி வருவதும், திமுக-அதிமுக தலைமைக்கு கூடுதல் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ராஜ்யசபா சீட்

ராஜ்யசபா சீட் குறித்து இரு தரப்பும் எந்த உறுதியான வாக்குறுதியையும் அளிக்கவில்லை என்பதால், குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொள்வதா, இல்லை இழுத்தடிப்பதா என்ற குழப்பத்தில் தேமுதிக கையைப் பிசைந்து நிற்கிறது. தனித்து போட்டியிட மாட்டோம் என பிரேமலதா உறுதியாக கூறியுள்ள நிலையில், தேமுதிக முன்னால் தற்போது மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளில் ஒன்றை ஏற்றுக்கொள்வது அல்லது தவெக பக்கம் செல்லுவது.

தவெக கூட்டணி

ஆனால் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி என்பது அரசியல் ரீதியாக அதிக அபாயம் கொண்ட முடிவாக இருக்கும் என்பதால், அந்த ஆப்ஷனை தேர்ந்தெடுப்பது கடினம் என தேமுதிக வட்டாரங்களே கூறுகின்றன. 2024 மக்களவைத் தேர்தலில் விஜயகாந்த் மறைவால் உருவான அனுதாப அலை தேமுதிகவுக்கு ஓரளவு சாதகமாக அமைந்தது. விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், பல தொகுதிகளில் தேமுதிக பெற்ற வாக்குகள் அதிமுகவுக்கு மறைமுக பலமாகவே மாறின.

தேமுதிக இழுபறி

தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, தென்காசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் கிடைத்த கூடுதல் வாக்குகள் விஜயகாந்த் மீதான தனிப்பட்ட ஈர்ப்பு, பிரேமலதாவின் தீவிர பிரச்சாரம் மற்றும் குறிப்பிட்ட சமூக ஆதரவு ஆகியவற்றின் கலவையாக இருந்ததாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். தொகுதி ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வாக்குகள் வரை தேமுதிகவுக்கு உறுதியான ஆதரவு இருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன.

அரசியல் இழுபறி

2026 தேர்தலில் நடிகர் விஜய் களத்தில் இருப்பதால் திமுக, அதிமுக வாக்குகள் பிளவுபடும் சூழல் உருவாகலாம். அப்படியான நிலையில், இந்த குறைந்த வாக்கு வித்தியாசமே வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறும். அதனால்தான் இரு திராவிட கட்சிகளும் தேமுதிகவை முழுமையாக புறக்கணிக்காமல், ஒரு எல்லை வரை பேச்சுவார்த்தையை இழுத்துச் செல்கின்றன. ஆனால் கடந்த கால அனுபவங்களை நினைவுபடுத்தி, பிரேமலதா மீண்டும் அதே தவறையே செய்கிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

தேமுதிக தோல்வி?

2011, 2016, 2021 தேர்தல்களில் கடைசி வரை கூட்டணியை உறுதி செய்யாமல் இழுத்தடித்தது, இறுதியில் தேமுதிக தனித்து விடப்பட காரணமாக அமைந்தது. அப்போது விஜயகாந்த் தலைமையில் இருந்த போதும், பிரேமலதா மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் மாறிமாறி பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுத்தனர். அதன் விளைவாக 2021-ல் தேமுதிக அரசியல் ஓரங்கட்டலுக்கு தள்ளப்பட்டது. இப்போது 2026 தேர்தலிலும் அதே கதை திரும்பும் அபாயம் இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். இந்த தேர்தலிலும் தேமுதிக தோல்வியை சந்தித்தால், கட்சித் தொண்டர்களின் மனநிலை மேலும் தளர்ந்து போகும் அபாயம் இருப்பதாகவும் சொல்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+