கொரோனா பரவுது.. தேர்தலை உடனே ரத்து செய்யுங்க.. தமிழகத்தில் எழுந்த குரல்.. எந்த கட்சி தெரியுமா?
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்திலிருந்து ஒரு கட்சி சார்பில், கோரிக்கை எழுந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பரப்புரை
தேர்தல் பரப்புரைகளில் மக்கள் அதிகமாக கூடும் வேளையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதார துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த நிலையில் உடனடியாக தேர்தலை ரத்து செய்து தள்ளிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்து தேசிய கட்சியின் சார்பில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
முதல் முறையாக குரல்கள்
இப்படி ஒரு கட்சி இருப்பதே இன்றுதான் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனாலும், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழகத்திலிருந்து முதல் முறையாக குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது கவனிக்கத் தக்கதாக உள்ளது. எனவேதான் இந்த செய்தி முக்கியத்துவம் பிடித்துள்ளது.
விசில் அடித்து போராட்டம்
இந்து தேசிய கட்சி தலைவர் ட்ரிபிள் எஸ் மணி தலைமையில் 5 பேர் விசில் அடித்துக் கொண்டு போராட்டத்தை முன் எடுத்துள்ளனர். தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பியபடி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் ரத்து
விலைமதிப்பற்ற மக்கள் உயிரைக் காக்க உடனடியாக சட்டப்பேரவைத் தேர்தலை ஐந்து மாநிலங்களிலும் ரத்து செய்ய வேண்டும் என்று விசில் அடித்துக் கொண்டு வலியுறுத்தினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
தேர்தல் ரத்து இல்லை
இரு தினங்கள் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு, கொரோனா நோய் பரவலை காரணமாக வைத்து, தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப்படாது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இன்னொரு பக்கம் தேர்தலை ரத்து செய்ய ஒரு கட்சி குரல் எழுப்பியுள்ளது. இதனால், தமிழக தேர்தல் பற்றி திக், திக் மனநிலையுடன் இருக்கிறார்கள் மக்கள்.