முதல்வராக விஜய்.. பதவியேற்பு விழாவுக்கு வந்த ’லாட்டரி’ சாண்டியாகோ மார்ட்டின்! முதல் வரிசையில் இடம்!
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார் இந்த நிலையில் விஜய் பதவி ஏற்பு விழாவில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் கலந்து கொண்டார். அவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது
தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் விஜய் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த விழாவில் தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆனால் ஆட்சியை அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்று விஜய் ஆட்சியை அமைத்துள்ளார். விஜயின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை காவல் ஆணையர் தலைமையில் சுமார் 6000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், விஜய் பதவியேற்பு விழாவில் பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் பங்கேற்றது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு விழா அரங்கின் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
2026 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட லாட்டரி மார்ட்டின் குடும்பத்தினர் அனைவரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவரது மருமகனான ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் விஜய் அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளார். இதனால் மார்ட்டின் குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட ஆதவ் அர்ஜுனா, 17 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல், மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டினும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவர் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர்.
புதுச்சேரியிலும் மார்ட்டின் குடும்பத்தின் அரசியல் தாக்கம் இருந்தது. அவரது மகனும், லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசியலில் மார்ட்டின் குடும்பம் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications