தங்கமாக மின்னிய மின்வாரியம.. பேரிச்சம்பழக் கடைக்கு போனதற்கு யார் காரணம்.. சட்டசபையில் சூடான விவாதம்
சென்னை: மின்சார வாரியம் பேரிச்சம்பழக் கடைக்கு போனதற்கு யார் காரணம் என ஆதாரம் கேட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக எம்எல்ஏ நறுக் பதிலடியை கொடுத்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எழும்பூர் திமுக சட்டசபை உறுப்பினர் பரந்தாமன் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் சோழர் காலத்தில் எழும்பூர் தலைநகரமாக இருந்தது என குறிப்பிட்ட அவர், 900 ஆண்டுகள் பழமைவாய்ந்த எழும்பூர் பகுதியை எழுமூர் என பெயர் மாற்ற வேண்டும். ஆங்கிலத்தில் Ezhumoor என மாற்ற வேண்டும்.

தமிழ்நாடு மின்வாரியம்
மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்வாரியம் அதானி குழுமத்திடமிருந்து மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ 7க்கு வாங்கியது ஏன், மகாராஷ்டிரா ரூ 5 க்கு வாங்கும்போது தமிழகத்தில் மட்டும் ஏன் ரூ 7 க்கு வாங்கப்பட்டது. மேட்ச் பிக்சிங் விளையாட்டில் கேள்விப்பட்டிருக்கிறோம். இதென்ன பர்சேஸ் பிக்சிங் நடந்துள்ளதே.

தமிழக மின்சார வாரியம்
தங்கமாக இருக்க வேண்டிய தமிழக மின்சார வாரியம், ஈயம், பித்தளையாக மாறி பேரிச்சம்பழக் கடைக்கு போனதற்கு யார் காரணம் என பரந்தாமன் கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாங்கள் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கியதற்கு ஆதாரம் இருக்கிறதா என கேட்டார்.

சிஏஜி அறிக்கை
அதற்கு பரந்தாமனோ ஏன் இல்லை. சிஏஜி அறிக்கையின் 2013- 2018 ஆம் 5 ஆண்டுக்கான புத்தகத்தில் போய் பாருங்கள். அதில் ஆதாரம் இருக்கிறது என பதிலடி கொடுத்தார். அது போல் நேற்றைய தினம் மின்சார கட்டணம் அதிகமாக வசூலிப்பது யார் என்பதில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு இன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

சிஏஜி இழப்பு
அதிமுக ஆட்சியில் தமிழக மின்சார துறைக்கு ரூ 424 கோடி இழப்பு ஏற்பட்டதாக கடந்த ஜூன் மாதம் வெளியான சிஏஜி அறிக்கையில் பகீர் தகவல்கள் இடம்பெற்றன. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் போது தனியாரிடம் இருந்தும் மிக அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்யப்பட்டதால் தமிழக மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதிமுக ஆட்சியில் 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ 14 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. மத்திய உற்பத்தி திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கூடுதல் செலவாக ரூ 2,381.54 கோடி ஏற்பட்டுள்ளது. உரிய காலத்தில் திட்டம் நிறைவேறாததால் பற்றாக்குறையைச் சமாளிக்க மின்சாரம் வாங்கியதில் கூடுதல் செலவு ரூ 2,099.48 கோடி ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தை பெறாமல் உள்ளூரில் மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ 1,055.8 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications