பரபர அரசியல் சூழலில் நாளை கூடுகிறது தமிழக சட்டசபை.. துணை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நாளை காலை 9.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடுகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை நாளை கூடுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி கூடியது. முதல் நாளில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. ஜூன் 21 ஆம் தேதியில் இருந்து அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏக்களின் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஜூன் 29 ஆம் தேதி வரை 9 நாட்கள் காலையிலும், மாலையிலும் சட்டப்பேரவை கூடியது. பேரவை விதிகளின்படி சட்டப்பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், இந்த டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், அடுத்த கூட்டத்தொடர் நாளை (டிசம்பர் 9 ஆம் தேதி) கூட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம், பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
மேலும், மதுரை டங்ஸ்டன் சுங்க உரிமை ரத்து செய்திடவும் மாநில அரசின் அனுமதி இன்றி சுரங்க உரிமங்களுக்கான ஏல உரிமையை வழங்கக் கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்தித் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
அதன் பின்னர், கேள்வி நேரம் தொடங்கும். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். 2024-2025-ம் ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதன் மீதான விவாதம் நடைபெற்று, கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது.
எதிர்க்கட்சிகள், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக குற்றம்சாட்டி வரும் நிலையில், அது தொடர்பாக சட்டசபையில் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடந்தாலும், காரசாரமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.












Click it and Unblock the Notifications