Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TAPS போதாது.. பழைய ஓய்வூதியம் தான் வேண்டும்! அதிரடியாக கூறிய JACTO GEO! வெளியான அதிரடி அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு அறிவித்து உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் ( tamil nadu assured pension scheme - taps) பழைய ஓய்வூதியத்தினைப் பெறுவதற்கான முதல்படி எனவும், பழைய ஓய்வூதியத்தினை முழுமையாகப் பெறுவதற்கும் ஏனைய 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான இயக்க நடவடிக்கைகள் தொடரும் என ஜாக்டோ - ஜியோ ( JACTO-GEO - Joint Action Council of Tamil Nadu Teachers Organisations and Government Employees Organisation) கூறியுள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்," 3.1.2026 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசு பணியாளர்கள் மனம் மகிழும் வகையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட (TAPS) ஓய்வூதியத் திட்டத்தினை அறிவித்தார்கள்.

Tamil Nadu JACTO GEO old pension Scheme

இந்த அறிவிப்பிற்கு ஜாக்டோ ஜியோ மனமார்ந்த நன்றியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது. நேற்றைய தினம் அறிவிப்பு வெளிவந்த உடனேயே, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் ஜாக்டோ ஜியோவுக்கு மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்தார். இந்த நல்லெண்ண நடவடிக்கை அடிப்படையில் ஜாக்டோ ஜியோ 6.1.2026 முதல் மேற்கொள்ளவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 1.4.2003 முதல் தமிழ்நாட்டில், இந்தியாவிலேயே நடைமுறையில் இல்லாத ஒரு ஒய்வூதியம் திட்டம் என்ற பெயரில் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் நடைமுறைப்படுத்தினார்.

மேலும், நிதி நெருக்கடியில் தமிழ்நாடு அரசு உள்ளது என்பதைக் காரணம் காட்டி, இதோடு ஓய்வூதியப் பலன்களை குறைக்கின்ற ஐந்து அரசாணைகளை வெளியிட்டார் மட்டுமல்லாமல், 2001ல் ஆட்சிக்கு வந்த உடனேயே, வேலை நியமனத் தடைச் சட்டத்தினை கொண்டு வந்து, அரசுப் பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசு பணியாளர்கள் நியமனங்களை முற்றாக ஒழித்துக் கட்டினார்.

ஊழியர் விரோகப் போக்கிற்கு எதிராக, 2003ல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கிளர்ந்தெழுத்து, அடக்குமுறைகளை எதிர்கொண்டு, உச்சபட்ச பணிநீக்க (எஸ்மா, டெஸ்ம நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு, ஓய்வூதிய உரிமைகளை ஜாக்டோ ஜியோ மீட்டெடுத்தது. இந்தப் போராட்டத்தில் 50 மேற்பட்ட தோழர்களை இழந்து தான் நாம் நமது உரிமைகளை மீட்டெடுத்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல், 2006ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், வேலை நியமனத் தடைச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு, 2007 முதல் அரசுப் பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவ்வாறு பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு எல்லாம் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், 1.4.2003க்குப் பிறகு பணியில் சேர்த்து வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சல்லிக் காசு கூட ஓய்வூதியமாகக் கொடுக்கப்படாத சூழ்நிலையில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு மீண்டும் ஜனவரி 4, 2017ல் உதயமாகி அவர்களை பாதுகாப்பதற்காக இயக்க நடவடிக்கைகளை, போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஜாக்டோ ஜியோ 2017 செப்டம்பர் மாதத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தினை அறிவித்து களம் கண்டபோது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள், மீண்டும் ஓய்வூதியத்தினை வழங்குவதற்கு 100 சதவிகிதம் சாத்தியம் இல்லை என்பதை ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களிடம் பகிரங்கமாக ஈரோட்டில் அறிவித்தார். இதன் பின்னர்தான், ஜாக்டோ ஜியோ வீரியமான காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை மேற்கொண்டு, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினையும் எதிர்கொண்டு, உரிமைகளை மீட்டெடுப்பதற்காக களத்தில் நின்றது. இதன் விளைவாக, ஏழாவது ஊதியக் குழுவினை அமல்படுத்துவதற்கான ஆணையினை நீதிமன்றத்தின் வாயிலாகப் பெற்றோம்.

இன்றைக்கு நாம் பெறும் ஊதியம் என்பது ஜாக்டோ ஜியோவின் சமரசமற்ற 2017 காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் விளைவுதான் என்பதை நாம் மறந்து விட முடியாது. ஆனால், இந்தப் போராட்டத்தின் போது, ஓய்வூதியத்திற்கான தீர்வு என்பது எட்டப்படவில்லை என்ற சூழ்நிலையில், மீண்டும் 2019ல் ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை அறிவித்து 10 நாட்கள் வேலைநிறுத்தத்தினை மேற்கொண்டோம். ஆனால், அன்றைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் மிகக் கொடூரமான அடக்குமுறையால், பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் என்பது பல 100 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் வழங்கப்பட்டது.

ஜாக்டோ ஜியோவின் தொடர் சமரசமற்ற போராட்டங்களின் விளைவாகத்தான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து ஆட்சியாளர்கள், ஒன்றிய அரசின் ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்திடம் ஒப்பந்தம் செய்து, ஊழியர்-அரசின் பங்களிப்பினை செலுத்திவிடாமல், முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டிய ஒரு நிலையினை ஏற்படுத்தினோம் என்பதனை எண்ணிப் பார்க்க வேண்டும். இதன் காரணமாகத் தான், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை அறிவிக்க முடிந்தது.

அவர்களால் 2016 இல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி திருமதி. சாந்தா ஷீலா நாயர்தலைமையிலான ஓய்வூதியக் குழுவானது பின்னர் ஐஏஎஸ் அதிகாரி சீதரன் தலைமையேற்றார். பல ஆண்டுகள் காலம் கடந்தும் இக்குழு அறிக்கையினை அளிக்கவில்லை. இக்குழுவிற்கு அறிக்கை அளிக்க நிர்பந்தம் கொடுத்தது 2019 ஜாக்டோ ஜியோ நடத்திய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் அக்குழுவின் அறிக்கையானது இதுநாள் வரை வெளிவராமல், மர்ம முடிச்சாகவே உள்ளது.

ஆனால், தற்போது ஐஏஎஸ் அதிகாரி திரு. ககன்தீப் சிங் தலைமையிலான ஓய்வூதியக் குழு நிர்ணயிக்கப்பட்ட ஆறு மாதக் காலக்கெடுவிற்குள் அறிக்கை அளிக்காமல், கூடுதலாக மூன்று மாதங்கள் கால அவகாசம் எடுத்துக் கொண்டு அறிக்கையினை 30.12.2025ல் அளித்த நிலையில், அதன் மீதான அரசின் கொள்கை முடிவினை உடனடியாக நான்கே நாட்களில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்து, தமிழ்நாடு உத்திரவாதப்படுத்தப்பட்டு ஓய்வூதியத் திட்டத்தினை (TAPS) அறிவிக்கிறார் என்றால், இதற்கு ஜாக்டோ ஜியோவின் தொடர் நடவடிக்கைகள்தான் காரணம் என்பதை யாராலும் மறுதலிக்க முடியாது.

ஜாக்டோ ஜியோ பழைய ஓய்வூதியத்தினை பெறுவதற்கான போராட்டத்தினை தானே நடத்தியது, ஆனால் இன்று அது நடைமுறைப்படுத்தப்படவில்லையே என்ற வினாக்கள் பல்வேறு தரப்புகளில் எழுப்பப்பட்டு வருகின்றன. 2017 ஜனவரி 4ல் மீண்டும் கட்டமைக்கப்பட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பானது கடந்த 2026 ஜனவரி 3ல் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஒன்பது ஆண்டுக்கான வீரியமிக்க போராட்டம்தான் 23 ஆண்டுகால ஓய்வூதிய அற்ற நிலையினை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பெரும்பான்மையான கூறுகள் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூயதித் திட்டத்தில் இருக்கிறது என்பதனை ஜாக்டோ ஜியோ மிகச் சிறந்த முன்னேற்றமாகப் பார்க்கிறது. ஆனால், முழுமையான ஓய்வூதியமாக, அதாவது பழைய ஓய்வூதியமாக இல்லை என்பதையும் ஜாக்டோ ஜியோ மறுக்கவில்லை.

தோழர்களே, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு சலுகையானது, மாண்புமிகு நிதியமைச்சர் கடந்த 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 1-4-2026 முதல் சரண் விடுப்பு சலுகை நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தபோது, அதனை ஜாக்டோ ஜியோ கடுமையாக எதிர்த்தது. அதன் விளைவாகத்தான், இன்று 1.10.2026 முதல், அதாவது அறிவித்த அறிவிப்பிற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகப் பெறக் கூடிய சூழ்நிலையினை உருவாக்கியுள்ளோம்.

எதிர்கால தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தினைப் பொறுத்தவரையில், 6.75 இலட்சம் பேரின் பணி ஓய்விற்குப் பிறகான வாழ்வாதாரத்தினையும் அவர்களின் சுயமரியதையினையும் ஜாக்டோ ஜியோ பாதுகாத்துள்ளது. பின்வரும் அம்சங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளதைப்போல் வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

> 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு கடைசியாகப் பெற்ற மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியம். அதற்கும் குறைவான ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளது போன்று விகிதாச்சார அடிப்படையில் பணிக்காலத்திற்கேற்ப ஓய்வூதியம்

> ஓய்வூதியத்திற்கு ஒன்றிய அரசு அறிவிக்கும் ஆறு மாத காலத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு

> ஓய்வூதியதாரர்கள் இறந்துவிட்டால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியம்

> குடும்ப ஓய்வூதியத்திற்கும் ஒன்றிய அரசு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அறிவிக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி

> ஓய்வு பெறும்போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் பணிக்கொடை.

> ஓய்வூதியம் பெறுவதற்குரிய பணிக்காலத்தை நிறைவு செய்யாதவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம்.

> இதுநாள்வரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஏற்கனவே பணி ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பத்திற்கும் சிறப்புக் கருணை ஓய்வூதியம்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இல்லாத விஷயம் என்னவென்றால் ஊழியர்களின் பங்களிப்பாக ஒவ்வொரு மாதமும் மாத ஊதியத்தில் 10% பணி ஓய்வு பெறும் வரை செலுத்த வேண்டும். மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளதைப் போல், பணியாளர்கள் பொது வருங்கால வைப்பு நிதியில் செலுத்தும் தொகை ஒட்டு மொத்தமாக பணி ஓய்வின்போது மீளப் பெற இயலாத நிலை.

பணிக்கொடையினைப் பொறுத்தவரையில், இதுநாள் வரையில், அதாவது கடந்த 23 ஆண்டுகளில் வழங்கப்படாத பணிக்கொடையினை மீட்டெடுத்துள்ளோம். அமுல்படுத்தப்படும் ஊதியக் குழுவில், இத்தொகையானது 40 இலட்சம் வரையில் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. 11.2026 முதல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பெரும்பான்மையான அம்சங்களை தன்னகத்தே கொண்ட திட்டமாக "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)" திகழ்கிறது. இன்றைய நிதிச் சூழலில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 11 ஆயிரம் கோடியினை இத்திட்டத்திற்காக செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், முழுமையான வெற்றியினைப் பெற முடியாவிட்டாலும், இதனை ஒரு கொள்கை முடிவாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்துள்ளார்கள் என ஜாக்டோ ஜியோ கருதுகிறது.

பணி ஓய்விற்குப் பிறகு செட்டில்மென்ட் திட்டமாக பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் இருந்த சூழ்நிலையில், பணி ஓய்வு பெற்றோருக்கு அளிக்கப்படும் செட்டில்மென்ட் தொகையானது, அவர்களின் எஞ்சிய வாழ்வு முழுமைக்கும் பயன்படாது என்பது திண்ணம். ஓய்வூதியம் மட்டுமே அவர்கள் குடும்பத்தில் சுயமரியதையும் தலைநிமிர்ந்தும். யாரது உதவியினை நாடாமலும் வாழ்க்கையினை இறுதி காலம் வரையில் நடத்துவதற்கு ஊன்றுகோல் என்பதனை ஜாக்டோ ஜியோ பலமுறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்துள்ளது.

இந்தியாவில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாசலப் பிரதேசம், கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்கள் பழைய ஓய்வூதியத்தினை நடைமுறைப்படுத்திவிட்டோம் என்று அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டாலும், அந்த மாநிலங்கள் ஏற்கனவே ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில், ஆணையம் தொகையினை திரும்பித் தராததால், ஓய்வூதியம் தொடர்பான அறிவிக்கை அளவிலேயே உள்ளதே அன்றி, நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இன்றைய உலகப் பொருளாதாரச் சூழ்நிலையில், பல நாடுகளில், ஓய்வூதியம் வழங்குவதில் கடும் நிதிச்சுமையினை எதிர்கொண்டுள்ளதை பார்க்க வேண்டியுள்ளது என்பதோடு பங்களிப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறியுள்ளது.

பல்வேறு காரணிகளை மனதில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், இதற்கு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 2017 செம்டம்பர் மாதத்தில் ஜாக்டோ ஜியோவிடம் ஓய்வூதியம் வழங்குவதற்கு 100 சதவிகிதம் சாத்தியம் இல்லை என்று ஆணித்தரமாகச் சொன்னதைப் பொய்யாக்கி, 2021 தேர்தல் வாக்குறுதியில் இடம்பெறச் செய்து, தற்போது 50 விழுக்காடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் சாத்தியம் தான் என்பதையும் அதனை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசு பணியாளர்களுக்கு வழங்குவது அரசின் தார்மீகக் என்பதையும் நிரூபித்துள்ளார். கடமை

அதோடு மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ள இன்றைய காலகட்டத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசுப் பணியாளர்கள் நலனைக் காப்பதிலும் முன்னோடி மாநிலம் என்பதை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் உறுதிபடுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்ட அறிவிப்பிற்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்கிய மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சுழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் ஜாக்டோ ஜியோ நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. மாண்புமிகு முதலமைச்சரின் அவர்களின் அறிவிப்பிற்குப் பிறகான சந்திப்பில் அமைச்சர் பெருமக்களிடம் பழைய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து விடுபட்ட அம்சங்களை விரைந்து சீர்செய்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை ஜாக்டோ ஜியோ சார்பாக வைக்கப்பட்டது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாண்புமிகு முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து அளித்துள்ளார்கள். நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளது.

ஜாக்டோ ஜியோவினைப் பொறுத்தவரையில், ஓய்வூதியத்தினை மீட்டெடுக்கும் இயக்க நடவடிக்கைகளை இத்தோடு நிறுத்தி வைக்கிறோம் என்ற பேச்சிற்கே இடமில்லை. தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உரிய முறையில் கொண்டு சென்று, அறிவிக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை 1.1.2026 முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையினை வெளியிடுவதற்கும் 10 சதவிகித மாதாந்திர பங்களிப்பினை முற்றிலுமாக கைவிடுவதற்கும் பணி ஓய்வு பெறும் வரை பணியாளர்கள் சார்பாக பிடித்தம் செய்த பங்களிப்புத் தொகையினை பணி ஓய்வின் போது வட்டியுடன் திரும்ப வழங்குவதற்கும் முழு ஓய்வூதியம் வழங்குவதற்கான காலத்தினை 25 ஆண்டுகளாக நிர்ணயம் செய்வதற்கும் ஏனைய 9 அம்சக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதற்கான இயக்க நடவடிக்கைளை ஜாக்டோ ஜியோ மேற்கொள்ளும்.

ஜாக்டோ ஜியோ முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. மு. அன்பரசு அவர்கள் நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி முதல் வெற்றியை முழு வெற்றியாக மாற்றுவோம் என்பதை நினைவு கூர்கிறோம்.

ஓய்வூதியத்திற்கான இந்த வெற்றி என்பது 2017 முதல் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாம் அனைவரும் நமது ஒற்றுமை என்ற பதாகையினை உயர்த்திப் பிடித்து, நமக்குள் கருத்து மோதல்கள் பல இருந்தாலும், அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, களத்தில் முன்களப் போராளிகளால் நின்று சாத்தியமாக்கி உள்ளோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் ஜாக்டோ ஜியோ பதிவு செய்கிறது. மேலும், மாநில மையத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியதற்கும் ஜாக்டோ ஜியோ மாநில மையத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.,

எந்த போராட்ட முடிவுகளை எடுத்தாலும், களத்தில் நின்று, திக்கெட்டும் சிட்டாய்ப் பறந்து உறுப்பினர்களைச் சந்தித்து, இயக்க நடவடிக்கைகளை எடுத்துரைத்து, போராட்டமே நமது கோரிக்கைகளுக்கான தீர்வு என்பதனை கொண்டு சென்ற இலக்கை நோக்கிய நமது பயணத்திற்கு வித்திட்ட ஜாக்டோ ஜியோ மாவட்ட, வட்டப் பொறுப்பாளர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம்." என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+