ரத்த புற்றுநோயால் அவதிப்படும் ஷிஹான் ஹுசைனி! வீடியோ காலில் ஆறுதல் சொன்ன பாஜக அண்ணாமலை
சென்னை: ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கராத்தே வீரர் ஷிஹான் ஹுசைனியுடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ கால் மூலம் பேசி, அவருக்காக தாங்கள் இருக்கிறோம் என தைரியத்தை ஊட்டினார். ஹுசைனியும் மிகவும் தைரியமாகவே காணப்பட்டார்.
மதுரையை சேர்ந்தவர் ஷிஹான் ஹுசைனி. இவர் கராத்தே மாஸ்டர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கே பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில்தான் அறிமுகமானார். அது போல் பத்ரி படத்தில் விஜய்க்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராகவும் ஹுசைனி நடித்திருக்கிறார்.

ஒரு படத்தில் பாம்புகளை வைத்து வளர்ப்பவர் போல் நடித்திருந்தார். அந்த பாம்புகளுக்கு இடையே ஒரு சண்டை காட்சியும் படமாக்கப்பட்டது. இந்த நிலையில் ஹுசைனிக்கு ரத்த புற்றுநோய் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தான் ஒரு நாள் உயிர் வாழ வேண்டுமானாலும் கூட இரு பாட்டில் ரத்தத்தை ஏற்ற வேண்டும். மருத்துவர்களும் ஒன்றும் செய்ய முடியாது என கைவிட்டுவிட்டதாக சொன்னார். மேலும் தான் தனது நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனாலும் தான் எதை பற்றியும் பயப்படவில்லை. தான் தைரியமாக போராடுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஹுசைனி தனது காலத்திற்கு பிறகு தனது கராத்தே பயிற்சி பள்ளிகளையும் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டாராம். அது போல் தனது கராத்தே ஸ்கூலை விற்க விரும்புவதாகவும் அதை தன்னிடம் பயிற்சி பெற்ற பவன் கல்யாண் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அவரது வெள்ளை அணுக்கள் (white blood cells) 4000 ஆக இருந்த நிலையில் தற்போது பூஜ்ஜியமாகிவிட்டது. இதனால் ஹுசைனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. குளிர் காய்ச்சல் மற்றும் உடல் அரிப்பால் அவர் அவதிப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் ஒரு கடிதத்தை உதயநிதி ஸ்டாலினுக்கு அனுப்பியிருந்தார். அதில் அவர் கூறுகையில் அன்புள்ள உதயநிதி ஸ்டாலின் எனது நிலைப்பாடு உங்களுக்கு தெரியும். மூன்று நாட்களுக்கு முன்பு எனது ஷூ வில்வித்தை பணியின் வில் வீரர்களுக்காக ஒரு வேண்டுகோளை அனுப்பினேன். முழு மாநிலமும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது நீங்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை.
மாநில விளையாட்டு அமைச்சருக்கு நகரத்தில் உள்ள அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனைக்கு காரில் செல்ல முப்பது நிமிடங்கள் நேரமில்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவமானம். நீங்கள் என்னை சந்திக்க விரும்பவில்லை என்றால் அது பரவாயில்லை. ஆனால் கீழே உள்ள கடிதத்தில் உள்ளடக்கங்களை உடனடியாக செயல்படுத்தவும்.
செய்தி உங்களை சென்றடையாததால் நீங்கள் என்னை சந்திக்கவில்லை என்று நான் இன்னும் உணர்கிறேன். இதை நான் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறேன். உங்கள் தந்தை மற்றும் மாமா மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எனது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. ஆனால் எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.
நீங்கள் என்னுடைய கோரிக்கையை செய்வீர்கள் என்று நம்புகிறேன். அது போல தமிழ்நாட்டில் உள்ள அன்பான நண்பர்களே என்னை பின்தொடர்பவர்களே நீங்கள் எனக்காக பிரார்த்தனை செய்வதற்கு பதிலாக எனது வேண்டுகோளை மாண்புமிகு தமிழ்நாடு விளையாட்டு அமைச்சருக்கு அனுப்பி உதவி செய்யுங்கள் என்று ரசிகர்களிடமும் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
அதாவது தன்னுடைய கடைசி ஆசையாக அவர் வில்வித்தை வீரர்களுக்கு ப்ராக்டிஸ் பண்ணுவதற்கு ஒரு கிரவுண்ட் வேண்டும் அது கொடுக்கிற வரைக்கும் எம் ஜி ஆர் ஜானகி ரோடு நடைபெறும் இடத்தில் பசங்களை ப்ராக்டிஸ் பண்ண விடுங்க. இதுதான் என்னுடைய ஒரே ஒரு கோரிக்கை. தமிழ்நாட்டு சார்பாக ஒலிம்பிக்கில் நம்முடைய மாணவர்கள் யாராவது கோல்டு மெடல் வாங்கவேண்டும் என்பது என்னுடைய லட்சியம். அதற்காக பிராக்டிஸ் பண்ணுவதற்கு முறையான ஒரு மைதானம் இல்லை. அதனால் தமிழ்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் இதற்காக உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்திருந்தார்.
இந்த நிலையில் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹுசைனியை பாஜக நிர்வாகி கோபிநாத் தனது சக நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தார். மேலும் அங்கிருந்தபடியே தமிழக தலைவர் அண்ணாமலைக்கு வீடியோ கால் போட்டு ஹுசைனியிடம் பேச வைத்தார்.
அப்போது அண்ணாமலை, "அண்ணே நான் உங்கள் சாதனைகளை பள்ளி, கல்லூரி காலத்திலிருந்தே பார்த்து வருகிறேன். உங்களுக்கு நிறைய துணிச்சல் இருக்கிறது. இன்ஸ்டாவில் நீங்கள் கித்தார் வாசித்ததையும் நான் பார்த்தேன். மனதை விட்டுவிடாதீர்கள். நாங்கள் இருக்கிறோம். எந்த உதவியாக இருந்தாலும் கேளுங்கள். நீங்கள் பூரண நலம் பெற வாழ்த்துக்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.
அதற்கு ஹுசைனி, என்னை போன்ற ஒரு சாதாரண குடிமகனின் இன்ஸ்டா பக்கத்தை நீங்கள் பார்ப்பது எனக்கு சந்தோஷம். நான் தைரியமாக இருக்கிறேன். வீரர்களுக்கு சாவெல்லாம் ஒரு விஷயமே இல்லை என ஹுசைனி தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications