மூளையை தாக்கும் கொடூர பாக்டீரியா! தமிழகத்தில் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழப்பு
சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் மூளையைத் தாக்கும் பாக்டீரியா தொற்று காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டில் ஒரு பல் மருத்துவமனையில் இவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த பல் மருத்துவமனையில் இருந்தே இவர்களுக்குப் பாக்டீரியா தொற்று ஏற்பட்டதாக தி லான்செட்டில் ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதெல்லாம் திடீர் திடீரென புதிது புதிதாக வைரஸ் மற்றும் பாக்டீரியா பரவல்கள் ஏற்பட்டு வருகிறது. இவை பல்வேறு மோசமான பாதிப்புகளையும் கூட ஏற்படுத்திவிடுகிறது. அப்படி தமிழகத்தில் ஏற்பட்ட பாக்டீரியா பாதிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

சிஎம்சி வேலூர், ஐசிஎம்ஆர், தமிழ்நாடு பொதுச் சுகாதார இயக்குநரகம் உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்த மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் ஒரே பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 9 பேருக்கு மூளையைத் தாக்கும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது..
என்ன நடந்தது!
பொதுவாகப் பல் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் கருவிகளை ஒரு நோயாளிக்குப் பயன்படுத்திய பிறகு, முழுமையாகக் கிருமி நீக்கச் செயல்முறைக்கு உள்ளாக்க வேண்டும். ஆனால், அதுபோல உரியக் கிருமி நீக்கச் செயல்முறைக்கு உள்ளாக்காமல் பலருக்குச் சிகிச்சை அளித்தால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பல் சிகிச்சையின் போது நோயாளிகளின் வாயைச் சுத்தப்படுத்தும் சலைன் (உப்பு நீர்) மருந்து பாட்டிலைத் திறக்க கிருமி நீக்கம் செய்யாத ஒரு கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். பிறகு அந்த மருந்து மாட்டிலைுயம் உரிய முறையில் மூடவில்லை. அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதாலே 10 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 8 பேர் உயிரிழந்துவிட்டனர். அதாவது இறப்பு விகிதம் 80% ஆக இருப்பதாக நரம்பியல் அறிவியல் துறையின் டாக்டர் ஏஞ்சல் மிராக்லின் திருஞானகுமார் கூறியிருக்கிறார்.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன!
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நோயாளிகளின் வாயைச் சுத்தம் செய்ய அந்த சலைன் நீரைப் பயன்படுத்தியுள்ளனர். அதில் இருந்த பாக்டீரியாக்கள் ரத்த ஓட்டத்தில் கலக்காமல் நேரடியாக நரம்பில் புகுந்துவிட்டது. இதுவே உயிரிழப்பு அதிகரிக்கப் பிரதான காரணமாக இருக்கிறது. மரபணு வரிசை முறை சோனையில் அந்த பாக்டீரியா மூளையைத் தீவிரமாகத் தாக்குவதும் தெரிய வந்துள்ளது" என்றார்.
நியூரோமெலியோய்டோசிஸ் என்ற இந்த நோய் மூளை மற்றும் முதுகெலும்பு உள்ளிட்ட மத்திய நரம்பு மண்டலத்தைக் கடுமையாகத் தாக்கும் தொற்றாகும். இது வெப்பமண்டல பகுதிகளில் மாசடைந்த மண் மற்றும் நீரில் காணப்படும் பர்கோல்டேரியா சூடோமல்லே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
உயிரிழப்பு
கடந்த ஜூலை 2022 மற்றும் ஏப்ரல் 2023 வரை நியூரோமெலியோய்டோசிஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21 பேர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது பல் சிகிச்சை எடுத்துக் கொண்ட 10 பேருக்குத் தொற்று ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் 80%ஆக உள்ளது. பல் மருத்துவமனை செல்லாத 11 நோயாளிகளில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். அங்கு இறப்பு விகிதம் 9%ஆக உள்ளது.
இந்த 21 நோயாளிகளில், 17 பேர் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ராணிப்பேட்டையில் இரண்டு பேர், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் தலா ஒருவருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. பல் சிகிச்சையின் போது பாக்டீரியா நேரடியாக நரம்பு மண்டலத்தில் நுழைந்ததால் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 16 நாட்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னணி
கடந்த 2023 மே 9ம் தேதி நியூரோமெலியாய்டோசிஸ் வழக்குகள் அதிகரிப்பது கண்டறியப்பட்டது. அதில் சில கேஸ்கள் பல் மருத்துவமனையுடன் தொடர்புடையது என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட மருத்துவமனையில் மாதிரிகளைச் சேகரிக்க ஆய்வாளர்கள் சென்றுள்ளனர். இருப்பினும், அதற்குள் மருத்துவமனை முழுக்க கிருமி நீக்கம் செய்யப்பட்டு, மருத்துவமனை மூடப்பட்டது.
இருப்பினும், அங்குச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களின் மாதிரிகளில் சோதனை செய்தபோது அதில் பி. சூடோமல்லி இருப்பது இறுதியானது. திறக்கப்படாத பாட்டில்களில் இந்த பாக்டீரியா இல்லாத நிலையில், சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட பாட்டிலில் மட்டும் சூடோமல்லி இருப்பது தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications