“13 வருஷத்துக்கு பிறகு படிக்க போறேன்”: இலவச கல்வி குறித்த அறிவிப்பால் மாற்று பாலினத்தவர்கள் உற்சாகம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில், மாற்றுப் பாலினத்தவர்களுக்கான கல்வி குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்கு மாற்று பாலினத்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். எதிர் வரும் லோக்சபா தேர்தல், கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பு, மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதி சர்ச்சை, மாநிலத்திற்கான வரி பகிர்வு போன்ற சலசலப்புகளுக்கு நடுவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

அதேபோல பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் பெரும் கவனம் ஈர்த்தது. குறிப்பாக, "மூன்றாம் பாலினத்தோரின் கல்லூரிப் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும், 1,000 பேருக்கு ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி. ஆறு மாத உறைவிடப் பயிற்சி, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள், 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம்" உள்ளிட்ட அறிவிப்புகள் பெரும் கவனம் பெற்றிருக்கின்றன.
இந்நிலையில், கல்வி குறித்த அறிவிப்புக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தி ஊடகங்களுக்கு அவர்கள் அளித்துள்ள பேட்டியில், தங்களுக்கு உயர்கல்வி இலவசம் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவித்துள்ளனர்.
திருநங்கை ஒருவர் பேசுகையில்,"இந்த அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான் பள்ளி முடித்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு நானும் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயில முடியும் என்கிற சந்தோஷத்தை இந்த அறிவிப்பு கொடுத்திருக்கிறது. எங்களால் 12ம் வகுப்பு மேல் படிக்க முடியவில்லை. காரணம் 12-17 வயது காலத்தில்தான் எங்களுக்கு உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படும்.
எனவே இதையும் மீறி படிக்க செல்லும்போது ஏராளமான கேலி கிண்டலுக்கு ஆளாகிக்கொண்டிருந்தோம். கல்லூரியில் படிப்பதற்குரிய பொருளாதார சூழலும் இல்லை. எனவே கல்வியை கைவிட்டுவிட்டோம். ஆனால் இப்போது இந்த அறிவிப்பு மூலம் எங்களது கல்வி தொடர இருக்கிறது. கல்வி எங்கள் சமூகத்தின் நிலையை நிச்சயம் உயர்த்தும். இதன் மூலம் அரசு துறைகளிலும் எங்களுக்கு நிச்சயம் வேலை வாய்ப்பு கிடைக்கும். பட்ஜெட்டில் அறிவிப்போடு மட்டும் நின்றுவிடாமல் உனடடியாக இதனை அமல்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications