மாநிலங்களுக்கு 50% வரிப்பகிர்வு.. கல்வி நிதியும் உடனே வழங்குக.. நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்
டெல்லி: ஒருதலைபட்சமான நிபந்தனைகளை வலியுறுத்தாமல் தாமதமின்றி கல்வி நிதியை விடுவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தி இருக்கிறார். மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவிகிதத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், உறுதி அளித்த 41% நிதி பகிர்வு அளிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டம்
நடப்பு ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இம்முறை அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி பறந்தார். இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.

நிதிப் பகிர்வு
இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில், மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவிகிதம் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். தற்போது மாநிலங்களுக்கு 33.16% மட்டுமே மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வாக அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட 41 சதவிகித நிதிப்பகிர்வு வழங்கப்படுவதில்லை.
மத்திய அரசு திட்டங்கள்
15வது நிதிக்குழு பரிந்துரையின்படி மாநிலங்களுக்கான வரி வருவாய் பங்கு 41 சதவிதமாக உயர்த்தப்பட்டது. ஆனால் மத்திய அரசு உறுதி அளித்தபடி நிதிப்பகிர்வு வழங்கப்படாததால் மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கும் மாநில அரசு அதிக நிதியை செலவிட வேண்டிய தேவை உள்ளது. இது மாநில அரசுகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.
கல்வி நிதி
அதேபோல் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாததால் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி மறுக்கப்பட்டுள்ளது. 2025-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.2,200 கோடி நிதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஒருதலைபட்சமான நிபந்தனைகளை வலியுறுத்தாமல், எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் தாமதமின்றி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்.
ஆறுகளை தூய்மைப்படுத்தும் திட்டம்
அதேபோல் நகர்ப்புற மேம்பாட்டுக்கு பெருமளவிலான நிதியை கொண்டு வரும் திட்டத்தை உருவாக்குவது அவசியம். சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாக கொண்ட புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்க வேண்டிய அவசர தேவை உள்ளது. கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை போல் தமிழ்நாட்டில் காவிரி, வைகை மற்றும் தாமிரபரணி ஆறுகளை தூய்மைப்படுத்தும் திட்டம் தேவை. இந்த திட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications