நாட்டுக்கே ரோல் மாடல்.. இதுதான் தமிழ்நாடு ஸ்டைல்.. ஏசி ஓய்வறை பற்றி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை: உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்களுக்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வறை குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு குவளை தண்ணீராக, துன்பத்தில் உழல்வோருக்கு ஆதரவுக்கரமாக இருப்பதுதான் திராவிட மாடல் எனக் குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

உணவு டெலிவரி ஊழியர்கள்
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஸொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் 24 மணி நேர சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஊழியர்கள் மழை, வெயில் உள்ளிட்ட கடினமான சூழல்களிலும் கூட டெலிவரி சேவையை தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. டெலிவரி ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்கள் உள்ளதால் அவர்களுக்கான குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் பணி புரிய வேண்டிய நிலை உள்ளது.
சாலையோரம் கூடும் GIG பணியாளர்கள்
பல நேரங்களில் இவர்கள் ஓய்வு எடுக்க இடம் இல்லாததால் சாலை ஓரங்களில் கூடுகிறார்கள். இந்த நிலையில் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, சென்னையில் அண்ணா நகர் மற்றும் கே.கே.நகரில் ஏசி ஓய்வறைகளை மாநகராட்சி நேற்று (ஜூன் 11) முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
ஸ்பெஷல் ஓய்வறை
600 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள ஓய்வறையில் கழிவறை, குடிநீர், வசதி, 6 சார்ஜிங் பாய்ண்ட்கள் 25 பேர் வரை ஒரே நேரத்தில் அமரும் வகையில் பெஞ்ச் போடப்பட்டுள்ளன. மேலும் 20 இரு சக்கர வாகனங்கள் வரையிலும் பார்க்கிங் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக, சோதனை அடிப்படையில் அண்ணா நகர், கே.கே.நகரில் இந்த ஏசி ஓய்வறை தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கென பிரத்யேக குளிர்சாதன காத்திருப்பு அறை, கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் அதற்கான சீருடை, உரிய அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் இதை கண்காணிக்க 24 மணி நேரமும் செக்யூரிட்டியும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மற்ற பகுதிகளிலும்
சென்னை அண்ணா நகர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தியாகராய நகர் போன்ற பகுதிகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறைகளை அமைக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மற்ற முக்கிய நகரங்களிகும் இந்த ஏசி ஓய்வறை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
இந்த நிலையில், இது குறித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கூரியிருப்பதாவது: 'உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்களுக்குக் கழிப்பறை, ஏசி, சார்ஜிங் வசதி, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் ஸ்கேண்டிநேவியன் வடிவமைப்பில் இணையத் தொழிலாளர் கூடம் முதற்கட்டமாக, பெண் பணியாளர்கள் அதிகம் பணியாற்றும் சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல்! வெயிலில் வாடுபவருக்கு நிழல்மரமாக, தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு குவளை தண்ணீராக, துன்பத்தில் உழல்வோருக்கு ஆதரவுக்கரமாக இருப்பதுதான் திராவிட மாடல்!' என்று குறிப்பிட்டு தமது எக்ஸ் தளத்தில் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications