தமிழகத்தில் SIR பணிகள் நிறைவு! மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!
சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள்(SIR) நேற்றுடன் நிறைவடைந்திருக்கின்றன. இந்நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.
சமீபத்தில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அங்கு எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த பணிகள் காரணமாக சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் விடுப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. எனவே தேர்தலுக்கு முன்னர் இந்த பணிகளை மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் என 12 மாநிலங்களுக்கு எஸ்ஐஆர் பணிகள் கடந்த நவ.4ம் தேதி தொடங்கின.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று, படிவங்களை கொடுத்து அதை பூர்த்தி செய்து பெற்று வந்தனர். ஆனால் போதுமான ஊழியர்கள் இல்லாததால் ஏற்பட்ட பணி அழுத்தம் காரணமாக சில இடங்களில் அலுவலர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர். இருப்பினும் பணிகள் வேகமாக நடந்து முடிந்தன. அலுவலர்களுக்கு உதவியாக அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி நிலை முகவர்களும் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பெறப்பட்ட படிவங்களை அப்லோட் செய்யப்பட்டு வந்தது. இந்த பணிகள் டிச.4ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், தகுதியான வாக்காளர் படிவம் விடுபட்டுவிடக் கூடாது என்பதால் கணக்கீட்டு படிவம் பெறுவதற்கான அவகாசம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு டிச.14 வரை படிவங்கள் பெறப்பட்டன.
தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6,41,14,587 ஆகும். இதில் 6,41,13,772 படிவங்கள் வழங்கப்பட்டன. அவற்றில், 6,41,13,221 படிவங்கள் பெறப்பட்டிருக்கின்றன. பெறப்பட்ட அனைத்து படிவங்களும் அப்லோட் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள், இரட்டை பதிவு வாக்காளர்கள் ஆகியோரின் உண்மை தன்மை மீண்டும் ஆய்வு செய்து, நீட்டிக்கப்பட்ட காலத்தில் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இதன்படி தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டிருக்கிறார். அதை தொடர்ந்து தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாநகராட்சிகள், மாவட்ட ஆட்சியரக இணையதளங்களில் வாக்காளர் அடையாள அட்டை என்னை பதிவிட்டு பார்வையிடலாம்.
இதில் சரியான முகவரியில் இருந்தவர்களை தவிர, உயிரிழந்தவர்கள் முகவரி மாற்றியவர்கள் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கும். இப்படி நீக்கப்பட்டதற்கான காரணமும் அந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கும். இருப்பினும் இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18ஆம் தேதி வரை தெரிவிக்கலாம்.
இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எப்படி செக் செய்வது?
https://electoralsearch.eci.gov.in/ என்கிற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று, வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது தனிப்பட்ட விவரங்களை என்டர் செய்ய வேண்டும். அதில் உங்களுடைய பெயர், தந்தையின் பெயர், உங்களுடைய மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி இடம், வாக்குச்சாவடி தொகுதி எண் ஆகியவை காண்பிக்கும். இப்படியாக பெயரை உறுதி செய்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications