டெல்லியில் இருந்து வந்த தலை.. எல்லாம் அடியோடு மாறிடுச்சே.. தமிழக காங்கிரசில் நடந்த செம ட்விஸ்ட்!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் நியமிக்க முடியவில்லை. கோஷ்டி தலைவர்களின் அரசியலால் இந்த பட்டியல் வெளியாகவில்லை. வெளியிடவிடவில்லை.
இதற்காக செல்வப்பெருந்தகை எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்தன. இந்த சூழலில் தான் தமிழக காங்கிரஸ்சின் மேலிட பொறுப்பாளராக கிரிஷ் ஜோடங்க் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் சென்னை வந்த அவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் உட்பட கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரிடமும் ஆலோசனை செய்தார்.

காங்கிரஸ் உட்கட்சி மோதல்
ப.சிதம்பரம், செல்வப் பெருந்தகை, செல்லக்குமார், திருநாவுக்கரசு, பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோரும் தனித்தனியாக ஜோடங்கிடம் விவாதித்தனர். இதன் பிறகு டெல்லி சென்ற கிரிஸ் ஜோடங்க், கட்சியின் மேலிடத்திடம் பேசியிருக்கிறார். இதனையடுத்து, இன்று சென்னை வந்த ஜோடங்க், சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்துள்ளார்.
குறிப்பாக, நிர்வாகிகள் நியமனம் பற்றி விவாதித்துள்ளார். இதன் முடிவில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலிடத்தின் ஒப்புதலுடன் இந்த பட்டியலை வெளியிடவிருக்கிறார் ஜோடங்க். ஒரு வருடமாக ரிலீஸ் ஆகாமல் இருந்த பட்டியல், தற்போது ரிலீசாகவிருப்பதில் கதர்சட்டையினர் உற்சாகமாகியிருக்கிறார்கள். அதேசமயம், பட்டியல் ரிலீஸ் ஆகும் போது புதிய சர்ச்சை வெடிக்கும் என்றும் சொல்கின்றனர்
கூட்டணி
இது ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சிக்குள் சில சீனியர்கள் மட்டும், 'கட்சி அழிஞ்சிக்கிட்டு இருக்கு. காங்கிரஸ் வளரணும்னா திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வரவேண்டும். அது மட்டுமல்ல, கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தயாராக இருக்கிறது. அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டுமானால் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது அவசியம்' என அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள், என்று தகவல்கள் வர தொடங்கி உள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளராக கிரிஸ் ஜோடங்கரை கடந்த மாதம் நியமித்தது கட்சியின் அகில இந்திய மேலிடம். பொறுப்பாளராக நியமிக்கப்பட்டப் பிறகு முதன்முறையாக கடந்த 3-ந்தேதி சென்னை வந்தார் கிரிஸ்.
அண்ணாசாலையில் உள்ள கன்னிமாரா ஹோட்டலில் அவருக்கு ரூம் போட்டிருந்தது காங்கிரஸ் கட்சி. கிரிஸ்சும் ப.சிதம்பரமும் நெருங்கிய நண்பர்களாம். அதனால், கோவாவிலிருந்து சென்னைக்கு கிரிஸ் கிளம்பும் முன்பு, சிதம்பரத்திடம் பேசியிருக்கிறார்.
"சென்னைக்கு வாருங்கள் உங்களை சந்திக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார் ப.சி. ! அதன்படி, 3-ந்தேதி இரவே கன்னிமாரா ஹோட்டலில் கிரிஸ், ப.சி. சந்திப்பு நடந்திருக்கிறது. சிதம்பரத்திடம் தமிழக அரசியல் சூழலையும், காங்கிரஸ் தலைவர்களின் அரசியல் சிந்தனைகளையும் சிதம்பரத்திடம் கேட்டறிந்துள்ளார் கிரிஸ். அப்போது, "திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையானது. இந்த கூட்டணி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரவேண்டும்.
திமுக கூட்டணி
திமுகவுக்கு இருக்கும் அரசியல் கட்டமைப்பு காங்கிரஸுக்கு பலம் சேர்க்கிறது. எதார்த்தமான அரசியல் இதுதான். இதனை நாம் மறந்தால் நம்மை நாமளே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், தனக்கான லாபம் என்பதை உணர்ந்தே அரசியல் செய்பவர்கள். கட்சிக்கு எது உகந்தது என்பதை அவர்கள் யோசிப்பதில்லை.
இன்றைய சூழலில், தேர்தல் வந்தாலும் திமுக கூட்டணிதான் ஜெயிக்கும்" என்றெல்லாம் கிரிஸிடம் பகிர்ந்து கொண்டாராம் சிதம்பரம். தமிழக அரசியல்பற்றி தம்மிடம் உள்ள கேள்விகளுக்கு ப.சி.யிடம் கேட்டு தெளிவாகியிருக்கிறார் கிரிஸ். சிதம்பரம் அங்கிருந்து சென்றபிறகு செல்லக்குமார், பீட்டர் அல்போன்ஸ் சந்தித்துள்ளனர். மறுநாள் சத்தியமூர்த்திபவனுக்குச் சென்றார் கிரிஸ் ஜோடங்க். அவரை திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி.க்கள் ஜெயக்குமார், விஸ்வநாதன் உள்பட மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் தனித்தனியாக சந்தித்தனர். இதில் கூட்டணி பற்றி அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications