பெகாசஸ் விவகாரம்... உச்சநீதிமன்றம் மூலம் மத்திய அரசுக்கு கடிவாளம் -தமிழக காங்கிரஸ்
சென்னை: பெகாசஸ் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மத்திய அரசுக்கு கடிவாளம் போடும் வகையில் இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற ஒட்டுக்கேட்கும் மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியாவின் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் செல்பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
பெகாசஸ் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மூத்த பத்திரிகையாளர்கள் என். ராம் உள்ளிட்டோர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்திருக்கிறது. இந்நிலையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் கண்காணிப்பில் இணைய (சைபர்) நிபுணத்துவம் பெற்ற இருவரை உச்ச நீதிமன்றம் நியமித்திருப்பதன் மூலம் நீதி வென்றிருக்கிறது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து, நாட்டின் பாதுகாப்பை எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று பொட்டில் அடித்தாற்போல் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு தரப்பு வாதங்களை உறுதியாகவும் சந்தேகத்துக்கு இடமின்றியும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
உளவு பார்த்த விவகாரத்தில் தேசப் பாதுகாப்பை காரணம் காட்டுவதன் மூலம் உச்ச நீதிமன்றத்தை மவுனமாக்கிவிட முடியாது என்றும், தனிமனித உரிமைக்கு எதிரான தாக்குதலில் இருந்து ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பது அவசியம் என்றும் கூறியதன் மூலம், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 'குட்டு' வைத்துள்ளது.
ஜனநாயகத்தின் முக்கிய தூணான பத்திரிக்கை சுதந்திரத்துடன் இந்த பிரச்சினை தொடர்புடையதாக இருப்பது கவலைக்குரியது என்பதையும் உச்ச நீதிமன்றம் பதிவு செய்திருக்கிறது. இத்தகைய உளவு பார்க்கும் நடவடிக்கை பத்திரிக்கைகள் மீது நடத்திய தாக்குதல் என்பதையும் நீதிபதிகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
Recommended Video
பாராளுமன்ற ஜனநாயகத்தில் இப்பிரச்சினையை எழுப்பி தீர்வு காண முயன்ற எதிர்கட்சிகளுக்கு உச்சநீதிமன்றத்தின் மூலம் தீர்வு கிடைத்துள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ஜனநாயகத்துக்கு எதிரான தொடர் செயல்பாடுகளுக்கு, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கடிவாளமாக அமைந்துள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications