பத்திரப்பதிவு.. இதுதான் இனி தமிழ்நாட்டின் புதிய வழிகாட்டி மதிப்பு.. வெளியான வரைவு பட்டியல்
சென்னை: தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் புதிய திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஜூன் 10ம் தேதி (நேற்று) வெளியிடப்பட்ட இந்த புதிய வழிகாட்டி மதிப்பு வரைவு பட்டியல் மீது பொதுமக்கள் கருத்து சொல்ல 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துக்களுக்கு பிறகு இறுதி பட்டியல் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள் கடந்த 2012ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. அதில் சில குளறுபடிகள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்த காரணத்தால் கடந்த 2017ல், வழிகாட்டி மதிப்புகளில், ஒரேயடியாக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. இந்த விவாகரத்தில் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பேசிய அன்றைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், " 01.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 09.06.2017 அன்று முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. மேலும், விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது.

சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தைக் குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கோரிக்கைகளை ஏற்று, வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.
இக்குழு நிலஅளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். ஆகவே, வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறும்வரை, வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8-6-2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்" என்று கூறினார்.
இந்நிலையில் தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி வெளியிட்ட நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 9 பதிவுத்துறை மண்டலங்கள், 50 பதிவு மாவட்டங்கள், 571 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. பத்திரப்பதிவு செய்யப்படும் வழிகாட்டி மதிப்பீட்டில் கிரையம் பெறுவதற்கு 7 சதவீதம் முத்திரைத் தாள் கட்டணம், 2 சதவீதம் நிர்வாகக் கட்டணம் என மொத்தம் 9 சதவீத கட்டணத்தை பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தன. அதாவது ஒரே தெருவில் இருக்கும் இடங்களுக்கு வெவ்வேறு வழிகாட்டி மதிப்புகள் இருப்பதாக புகார்கள் எழுந்தது. எனவே இந்த வழிகாட்டி மதிப்பில் உள்ள குறைகளை களைய மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் துணைக்குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் பத்திரப்பதிவு, வருவாய், உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் இடம் பெற்று உள்ளனர். இந்த குழுவினர் வழிகாட்டு மதிப்பை தெருக்கள் வாரியாகவும், சர்வே எண் வாரியாகவும் விரிவாக ஆய்வு செய்து முரண்பாடுகளை களைந்து உள்ளார்கள்.
தற்போது திருத்தப்பட்ட இந்த வரைவு வழிகாட்டி மதிப்பு பட்டியல் பத்திரப்பதிவு துறையின் இணையதளமான https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் தெரு பெயர் அல்லது புல எண் பிரிவில் போய், 14 மண்டலத்தில் எந்த மண்டலம் என்பதை குறிப்பிட்டு, அதில் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமம், தெருவை குறிப்பிட்டால் திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பது தெரியும்.
இந்த திருத்தப்பட்ட வரைவு பட்டியலை காணும் பொதுமக்கள், அதில் தவறுகள் உள்ளதாகவோ அல்லது ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ தாராளமாக கருத்து சொல்லலாம். இதற்காக 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்களது கருத்துகளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலெக்டர் தலைமையிலான துணைக்குழுவிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். பொதுமக்களின் கருத்துகள் பரீசிலிக்கப்பட்டு அவை ஏற்று கொள்ளப்பட்டால் வரைவு பட்டியலில் திருத்தம் செய்யப்படும். அதன்பின் இறுதி வழிகாட்டி மதிப்பு பட்டியல் வெளியிடப்படும். அரசின் ஒப்புதலுக்கு பின்னர் இந்த புதிய திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்த வரைவு வழிகாட்டி மதிப்பு பட்டியலில் கிராமப்புறங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் நகர் பகுதிகளில் உள்ள முரண்பாடுகள் களையப்பட்டிருக்கிறது. எனவே கிராமங்களில் உள்ளவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நகரங்களில் தான் வழிகாட்டி மதிப்பு மாறி இருக்கும். அதனால் சில இடங்களில் மட்டும் அதிகபட்சமாக 10 சதவீதம் அளவுக்கு வழிகாட்டி மதிப்பு உயர்ந்துள்ளது. அதேபோல் சில இடங்களில் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதாவது ஒரு தெருவிற்கு ஒரு மதிப்பு என்கிற வகையில் வழிகாட்டி மதிப்பு மாற்றப்பட்டிருக்கிறது. உங்கள் தெருவின் வழிகாட்டி மதிப்பை https://tnreginet.gov.in/portal/ இணையதளத்தில் அறியலாம்.












Click it and Unblock the Notifications