தமிழகத்தில் ஊரடங்கு.. 'போலீசார் இதை கண்டிப்பாக பின்பற்றனும்..' டிஜிபி சைலேந்திர பாபு போட்ட உத்தரவு!
சென்னை: கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு நேரத்தில் போலீசார் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
ஓமிக்ரன் பரவல் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் அதேபோல வைரஸ் கேஸ்கள் உயரத் தொடங்கியுள்ளது.
இதனால் நிலைமை கையைவிட்டுப் போகாமல் இருக்கத் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
அதன்படி நேற்று முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும், ஜன. 9ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய பணியாளர்கள் தங்கள் பணிகளைத் தொடர்ந்து செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், கொரோனா ஊரடங்கில் போலீசார் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார்.

அத்தியாவசிய பணியாளர்கள்
அந்த அறிவிப்பில், "மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்கள், நீதிமன்றம் மற்றும் நீதித்துறை பணிகளில் ஈடுபடுவோர், உள்ளாட்சி, வங்கி, போக்குவரத்துத் துறை ஊழியர்கள் அலுவலுக்காகப் பயணம் மேற்கொள்ள அடையாள அட்டையைப் பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும்.
அத்திவாசிய பணிகளான பால், வினியோகம், மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிக்கை வினியோகம், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து சேவைகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்களில் பணிபுரிவோர் அடையாள அட்டையைப் பார்வையிட்டு உடனடியாக அனுமதிக்க வேண்டும்.

சரக்கு வாகனங்கள்
சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்படும் விவசாய விளை பொருட்கள், காய்கறி, பழங்கள், கறிக்கோழிகள், முட்டை போன்ற வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் இது பொருந்தும்.
உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனப் பணியாளர்களின் அடையாள அட்டை காண்பித்து பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

முழு ஊரடங்கு சமயம்
ஜனவரி 9ஆம் தேதி முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள போது உணவகங்களில் பார்சல் சேவைகள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனப் பணியாளர்களை மேற்குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், நிறுவனங்களின் நுழைவுத்தேர்வு மற்றும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்வோர் அழைப்பு கடிதத்தைக் காட்டினால் அனுமதிக்க வேண்டும். ஜன. 9ஆம் தேதி ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணிகளுக்கான தேர்வுகள் நடக்கவுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்குச் செல்லும் பயணிகளையும் அங்கிருந்து வீடுகளுக்குத் திரும்பும் பயணிகளையும் அனுமதிக்க வேண்டும்.
கிராமப்புற பகுதிகளில் விவசாயிகள். விவசாயப் பணிக்காகச் செல்வோர், அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணி முடிந்து சொந்த ஊர் செல்வோரை அனுமதிக்க வேண்டும்.

கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்
வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
வாகனத்தைச் சோதனை செய்ய வேண்டியிருந்தால் கையுறை அணிந்திருக்க வேண்டும். அடிக்கடி கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இரவு வாகன சோதனைகள் வெளிச்சம் உள்ள இடங்களில் நடத்தப்பட வேண்டும்.
காவலர்கள் தடுப்பான்கள் அமைத்து ஒளிரும் மேல் சட்டை அணிந்து பாதுகாப்பாக இரவு நேரங்களில் பணியாற்ற வேண்டும்.












Click it and Unblock the Notifications