நாளை தமிழக சட்டசபை தேர்தல்! வாக்களிப்பது எப்படி? வாக்களிக்கும் அறையில் எதையெல்லாம் செய்யக் கூடாது?
சென்னை: ஜனநாயகத் திருவிழாவான பொதுத் தேர்தலில், ஒவ்வொரு வாக்காளரும் தனது வாக்கை சரியாகப் பதிவு செய்வது மிக அவசியம். ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கலாம்.

படி 1: வருகை மற்றும் வரிசை பராமரிப்பு
வாக்குச்சாவடிக்குச் சென்றவுடன் முதலில் வாக்காளர்கள் வரிசையில் நிற்க வேண்டும். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வரிசையில் காத்திருக்கும்போது அமைதி காப்பது அவசியம்.

படி 2: அலைபேசி கட்டுப்பாடு
வாக்குச்சாவடிக்குள் அலைபேசி (Mobile Phone) பயன்படுத்த அனுமதி இல்லை. தேர்தல் பணியாளர்களிடம் உங்கள் செல்போனை 'சுவிட்ச் ஆஃப்' செய்து ஒப்படைக்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்கள் ஒரு டோக்கன் வழங்குவார்கள். வாக்கு செலுத்தி முடித்து வெளியே வரும்போது இந்த டோக்கனைத் தந்து உங்கள் அலைபேசியைப் பெற்றுக் கொள்ளலாம்.

படி 3: அலுவலர்களின் சரிபார்ப்பு
வாக்குச்சாவடிக்குள்ளே நுழைந்ததும் மூன்று நிலைகளில் சரிபார்ப்பு நடைபெறும்:
முதல் அலுவலர்: இவர் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) அல்லது அங்கீகரிக்கப்பட்ட மாற்று அடையாள ஆவணத்தைச் சரிபார்ப்பார். உங்கள் பாகம் எண் மற்றும் வரிசை எண்ணை உரக்கப் படிப்பார். இது அங்கிருக்கும் வேட்பாளர்களின் முகவர்கள் தங்கள் பட்டியலில் உள்ள பெயருடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க உதவும்.
இரண்டாவது அலுவலர்: இவர் உங்கள் இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைப்பார். பின்னர் பதிவேட்டில் உங்கள் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு, உங்களுக்கு ஒரு சிறிய 'ஸ்லிப்' (Slip) வழங்குவார்.
மூன்றாவது அலுவலர்: இவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டாளர். உங்களிடமிருந்து ஸ்லிப்பைப் பெற்றுக்கொண்டு, நீங்கள் வாக்களிப்பதற்கான அனுமதியை (Ballot) இயந்திரத்தில் வழங்குவார்.
படி 4: ரகசிய வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) வைக்கப்பட்டுள்ள மறைவான இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு உங்களுக்குப் பிடித்த வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு நேராக இருக்கும் நீல நிறப் பொத்தானை அழுத்தவும். அழுத்தியவுடன் 'பீப்' ஒலி கேட்கும். இது உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதை உறுதிப்படுத்தும். அது போல் நாம் வாக்களித்ததை செல்போனில் வீடியோவாகவோ படமாகவோ எடுக்கவே கூடாது. செல்போன் ஒரு சில பூத்களில்தான் டோக்கன் போட்டு வாங்கி வைத்துக் கொள்வார்கள்.

படி 5: விவிபேட் (VVPAT) சரிபார்ப்பு
வாக்குப்பதிவு இயந்திரத்தின் அருகிலேயே விவிபேட் இயந்திரம் இருக்கும். அதில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ, அந்த வேட்பாளரின் சின்னம் மற்றும் பெயர் ஒரு சீட்டில் தோன்றும். அது 7 விநாடிகள் மட்டுமே தெரியும். இதன் மூலம் உங்கள் வாக்குச் சரியாகச் சென்றதை நீங்கள் உறுதி செய்யலாம்.
இறுதியாக, ஜனநாயகக் கடமையை ஆற்றிய திருப்தியுடன் வெளியே வரவும். வெளியே செல்லும்போது டோக்கனைத் தந்து உங்கள் அலைபேசியைப் பெற்றுக்கொள்ள மறக்காதீர்கள். "நாட்டுப் பற்று, மக்கள் பணியில்" என்ற உணர்வோடு அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்!












Click it and Unblock the Notifications