ஸ்டாலின் போட்ட மீட்டிங்.. விஜய் போட்ட போன்கால்.. களமிறங்கிய உதயநிதி.. விடிய விடிய நடந்த ஆலோசனை?
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. கடந்த சில வாரங்களாக நிலவி வந்த தேர்தல் களம், இன்று முடிவுகளை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் உறங்காமல், தங்கள் கட்சி நிர்வாகிகளுடனும், முக்கிய அதிகாரிகளுடனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின்
வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான நேற்று மாலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்றார். அங்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அவர், சிறிது நேரம் மௌனமாக நின்று அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இல்லத்தில் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சில முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் கட்சி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் முடிவுகளுக்குப் பிந்தைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் வகையில் நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னை வந்தவுடன் அவர் தனது இல்லத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். குறிப்பாக, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கவனமாக இருக்க வேண்டிய அம்சங்கள் குறித்து அவர் அறிவுறுத்தினார். சில முக்கிய அரசு அதிகாரிகளுடனும் அவர் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு நிலவரங்களைக் கேட்டறிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதயநிதி ஸ்டாலின் நடத்திய நள்ளிரவு கூட்டங்கள்
திமுகவின் முக்கிய முகமாகவும், துணை முதலமைச்சராகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளை முடித்துவிட்டு வெளிநாடு சென்று இருந்தால்.. வெளிநாட்டில் இருந்து நேற்று சென்னை திரும்பினார். அவர் திரும்பிய சிறிது நேரத்திலேயே, கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் வியூகக் குழுவினருடன் நள்ளிரவு வரை தொடர் கூட்டங்களை நடத்தினார். ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் சூழல்கள் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து விரிவான அறிக்கைகளை அவர் ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
விஜய்யின் தமிழக வெற்றி கழகம்: புஸ்ஸி ஆனந்துடன் ஆலோசனை
திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து முதல் தேர்தலைச் சந்தித்திருக்கும் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' (TVK) மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கட்சியின் தலைவர் விஜய், நேற்றிரவு தனது முக்கிய ஆலோசகர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் வியூக நிபுணர் ஜான் ஆரோக்கிய சாமி ஆகியோருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். வாக்கு எண்ணிக்கை மையங்களில் கட்சியின் பிரதிநிதிகள் முதல்முறை என்பதால் பதற்றமின்றி செயல்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இன்று காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தலைவர்கள் அனைவரும் தங்கள் வெற்றியில் நம்பிக்கையுடன் இருக்கும் வேளையில், தமிழக மக்கள் யாருக்கு மகுடம் சூட்டப் போகிறார்கள் என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications