ராமதாஸ் உடன் கூட்டணியை உறுதி செய்தார் சசிகலா! தமிழக நலனுக்காக இணைந்திருப்பதாக அறிவிப்பு
சென்னை: விழுப்புரம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன், அஇபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், சசிகலாவின் அஇபுதமமுக, ராமதாஸ் தரப்பு பாமகவுடன் இணைந்து தமிழகம், புதுச்சேரி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழக மக்களின் நலனுக்காக கூட்டணி அமைத்திருப்பதாக ராமதாஸ் கூறியிருக்கிறார். கூட்டணி, 234 தொகுதிகளும் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் 5 முனை போட்டி ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியும் முழு வேகத்துடன் தயாராகி வருகிறது. மறுபுறம் இரு அணியாக செயல்பட்டு வந்த, பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு அணி, அதாவது அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறது.
கட்சிக்கு உரிமை கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, தேர்தலுக்கு பிறகு விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ராமதாஸ், கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இப்படி இருக்கையில்தான் சசிகலா, தைலாபுரம் ராமதாஸ் இல்லத்திற்கு சென்று கூட்டணியை பேசி முடித்திருக்கிறார்.
கூட்டணி இறுதி செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, "நாங்கள் புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். எங்கள் வேட்பாளர்கள் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெறுவார்கள்" என்று கூறியிருக்கிறார். அதேபோல ராமதாஸ் பேசுகையில், "எங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடும். எங்கள் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள், கூட்டணியில் இணையலாம்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications