நாடே லாக்டவுனில் இருக்கிறது.. ஜவுளி உட்பட 13 வகை ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!
சென்னை: நாடு முழுக்க லாக்டவுன் நடைமுறையில் இருக்கும் இந்த நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான 13 ஆலைகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இந்த ஆலைகள் அத்தியாவசிய தேவைகளுக்கான ஆலைகள் என அறிவுறித்தியிருந்ததாகவும், இப்போது மறுபடி கூறுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை சரிப்படுத்துவதற்காக வரும் 14ஆம் தேதி வரை நாடு முழுக்க லாக்டவுன் அறிவித்துள்ளது மத்திய அரசு. எனவே தமிழகத்திலும் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மளிகை, காய்கறி, பால் வினியோகம், மீடியா போன்ற அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் மட்டுமே சாலைகளில் நடமாட அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தநிலையில், 13 வகை ஆலைகள் இயங்குவதற்கு அனுமதி வழங்கி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
13 வகை ஆலைகள்
இரும்பு ஆலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், ரசாயனத் தொழிற்சாலைகள், உரம், ஜவுளி (பின்னலாடைத் தொழில் தவிர்த்து), சர்க்கரை ஆலைகள், கண்ணாடித் தொழிற்சாலைகள், வார்ப்படத் தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள், காகித ஆலைகள், டயர் தொழிற்சாலைகள், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவை செயல்படலாம் எனத் தொழிற்சாலைகள் துறை அறிவித்துள்ளது.
குறைந்த தொழிலாளர்
மேலும், மூடப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளுக்காக குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னலாடை தவிர்த்து, ஜவுளித் தொழிற்சாலைகள் இயங்கலாம் என்றால், திருப்பூர், காஞ்சீபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட நகரங்களில் மறுபடியும் ஆடை உற்பத்தி தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கூட்டம்
ஒரே இடத்தில் பலரும் கூடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுமே என்ற ஐயமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையில், நாட்டிலேயே அதிகம் கொரோனா வைரஸ் பாதித்த மாநில பட்டியலில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. 690 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற ஒரு சூழ்நிலையில் 13 வகையான ஆலைகள் இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது சரியான முடிவு தானா என்ற கேள்வி எழுகிறது.
சிக்கல்கள்
ஏனெனில் இந்த தொழிற்சாலைகளில் பணியாற்ற விருப்பபடாத தொழிலாளர்களை அதன் உரிமையாளர்கள் வேலையிலிருந்து நீக்க வழி ஏற்பட்டுவிடும். எனவே ரிஸ்க் எடுத்து தொழிலாளர்கள் பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இது அவர்களது குடும்பத்தினரை பதற்றத்தில் வைத்திருக்கும். எனவே, தமிழக அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.