வேங்கைவயல் விவகாரத்தில் தவறான தகவலை பரப்பாதீர்கள்! அந்த 3 பேர்தான் காரணம்! தமிழக அரசு
சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் 3 பேரின் தனிப்பட்ட விரோதமே காரணம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார்கள் வந்தன.

இந்த கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி பார்த்ததில் மேல்நிலை நீர்த்தேக்க நீரில் மலக்கழிவுகள் மிதப்பதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறும் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டின் தீவிரத்தையும் சமூக முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் இந்த வழக்கின் புலன் விசாரணையை 14.01.2023 அன்று தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றினார்.
அதைத் தொடர்ந்து, கூடுதல் காவல் துறை இயக்குநர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அவர்கள் உத்தரவின் பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை புலனாய்வு அதிகாரியாக நியமித்து புதுக்கோட்டை குற்ற எண் 01/2023 வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின் போது புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதோடு ஏராளமான ஆவணங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதைத் தவிர பல நபர்களின் அலைபேசி எண்கள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. வேங்கைவயல், எறையூர் கிராம மக்களிடம் இதற்கான பல்வேறு காரணங்கள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டது.
மேலும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களிடம் இருந்து உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, விரிவான டிஎன்ஏ பகுப்பாய்வும் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் பின்வரும் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன.
சம்பவம் நடப்பதற்கு இரு மாதங்களுக்கு முன்பு, 02.10.2022 அன்று வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையா என்பவர் கிராம சபை கூட்டத்தின் போது தமிழ்நாடு காவல் துறை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாக திட்டியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இந்த செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பது காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் முரளிராஜா, சுதர்சன், முத்தையா, முத்துக்கிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்ட போது அவற்றில் இந்தச் சம்பவம் தொடர்பான பல புகைப்படங்களும், உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்தத் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் இந்த சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்யதன் அடிப்படையில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மீது 20.01.2025 அன்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்பிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications