"ரூம் போட்டு யோசிப்பாங்களோ" எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை.. தற்கொலைகளை தடுக்க அரசின் நடவடிக்கை சரியா?
சென்னை: தமிழ்நாட்டில் தற்கொலை சம்பவங்களை தடுக்க எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து பார்க்கலாம்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தற்கொலை செய்து கொள்வோரின் அதிகரித்துள்ளது. அதில் பலர் எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் ஆகியவற்றை பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்கின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்க எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் விற்பனையை தடை செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழ்நாட்டில் தற்கொலைகளினால் ஆண்டு ஒன்றுக்கு 15முதல்16 ஆயிரம் வரையிலான மரணங்கள் ஏற்படுகின்றன. அதில் 10 முதல் 15 சதவிகிதத்தினர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.

எலி பேஸ்ட் தடையால் கிண்டல்
மற்றவர்கள் எல்லாம் சாண பவுடர், பால் டாயில், எலி பேஸ்ட் ஆகியவற்றை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் வரும் நாட்களில் எலி பேஸ்ட், சாண பவுடர் ஆகிய பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான நிமிடங்களில் இருந்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கலாய்த்து மீம்களை வெளியிட்டு வருகின்றனர்.

2014ல் திருப்பூர்
குறிப்பாக சீப்பை ஒழித்துவிட்டால் திருமணம் நிறுத்தப்படுமா என்று கேட்பது போல், எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் விற்பனைக்கு தடை விதித்தால் தற்கொலைகள் குறைந்துவிடுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் 2014ம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் மாதந்தோறும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 130 முதல் 150 வரை இருந்தது. இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் சாண பவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியது.

திருச்சி மண்டலக் கணக்கு
உடனடியாக ஒவ்வொரு கடைகளிலும் சாண பவுடர் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டபோது, இந்த தற்கொலை எண்ணிக்கை பாதிக்கும் குறைவாக பதிவாகின. இவ்வளவு ஏன், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 2018ம் ஆண்டு 138 பேரும், 2019-ஆம் ஆண்டு 165 பேர் எலி பேஸ்ட்டை சாப்பிட்டு உயிரிழந்தனர்.

தற்கொலை அதிகரிப்பு
இந்தியாவில் 2016-ல் 31,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து, கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 53 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. தற்கொலை எண்ணங்களுக்கு குடும்ப பிரச்னைகள் முதன்மையான காரணமாக இருப்பதாகவும், போதை மருந்துப் பயன்பாடு, திருமணம், காதல், தவறான உறவுமுறை, கடன் பிரச்னை, வேலையின்மை, தேர்வில் தோல்வி போன்றவையும் முக்கிய காரணங்களாக இருப்பதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அரசின் நடவடிக்கை சரியா?
அந்தத் தற்கொலையில் பெரும்பாலானோர் எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடரை தான் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை எண்ணங்கள் எழும்போது, அருகில் இருக்கும் பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில், எலி மருந்து மற்றும் எலி பேஸ்ட் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இதனை சுலபமாக வாங்கி சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் விற்பனைக்கு தடை நடவடிக்கை சரியானதாகவே பார்க்கப்படுகிறது.
அதேபோல் தமிழ்நாட்டில் ஒரு கட்டத்தில் சாணி பவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்துகொண்டோர் ஏராளம். அப்போது அதன் விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டுவந்த பின், அது குறைந்தது. இதற்கான சான்றுகள் ஏராளம் உள்ளன. அதனால் அரசு தரப்பில் அனுபவப்பூர்வமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டில் தற்கொலைகள் குறையும் என்று நம்புவோம்.












Click it and Unblock the Notifications