இது லிஸ்ட்லயே இல்லையே.. பழைய ஓய்வூதிய திட்டம்.. தமிழக அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், இந்த ஓய்வூதிய திட்டத்தில், சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளார்கள். இந்நிலையில் தமிழகத்திற்கு பழைய ஓய்வூதிய திட்டம்தான் வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு கடந்த 24-ந்தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. இந்த திட்டம் மூலம்
மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார். முழு ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்கான தகுதியாக பணி காலம் 25 ஆண்டுகளாகும். 25 ஆண்டுகளுக்கு குறைவாக அரசுப் பணியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஓய்வூதியத் தொகை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்படும்.

தற்போதைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமும், மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவீதமும் உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசின் பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில், சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் அமிர்தகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும் என்று நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள்தான், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்கும் நிலையை ஏற்படுத்தியது.
அந்தத் திட்டத்தில் உள்ள சில முக்கிய அம்சங்களை வரவேற்கிறோம். ஆனால் அந்த திட்டத்தை தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கோராது.
1.4.2003 தேதிக்குப் பிறகு அமல்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் ஒன்றியத்தின் நிலைப்பாடு ஆகும். ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்துடன் தமிழக அரசு இதுவரை ஒப்பந்தம் செய்யவில்லை என்பதால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதில் பிரச்சினைகள் எழாது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications