ரெடியா? துணிவு, வாரிசு படங்களின் கூடுதல் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி.. ரசிகர்கள் குஷி.. புதுவிபரம்
சென்னை: தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் ஒன்றாக இன்று திரைக்கு வந்தன. இந்நிலையில் வாரிசு, துணிவு படங்களுக்கான தியேட்டர் சிறப்பு காட்சிகளுக்கு கூடுதலாக 3 நாட்கள் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழக அரசு நடிகர்கள் விஜய், அஜித் ரசிகர்களுக்கு குட்நியூஸ் தெரிவித்துள்ளது. அதுபற்றிய முழுவிபரம் வருமாறு:
தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களாக விஜய், அஜித் உள்ளனர். இவர்களுக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தின் வீரம், விஜயின் ஜில்லா படங்கள் ஒன்றாக நேருக்கு நேர் பொங்கல் சமயத்தில் திரைக்கு வந்தன.
அதன்பிறகு விஜய், அஜித்தின் படங்கள் ஒன்றாக திரைக்கு வரவில்லை. தனித்தனி தேதிகளில் படங்கள் ரிலீசாகி வந்தன. இந்நிலையில் தான் பொங்கலையொட்டி விஜய், அஜித் படங்கள் ஒன்றாக திரைக்கு வரும் அறிவிக்கப்பட்டது.
செல்லம்மா சீரியலில் “வாரிசு” கதையா? தீ தளபதி பாட்டையும் விட்டு வைக்கலயே - விஜய் டிவியின் “துணிவு”
இன்று ரிலீசான வாரிசு, துணிவு
இயக்குனர் எச்.வினோத் இயக்கிய நடிகர் அஜித் நடித்த படம் ‛துணிவு'. அதேபோல் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‛வாரிசு'. இந்த 2 படங்களும் அறிவிப்பு செய்தபடி இன்று திரைக்கு வந்தன. படம் திரைக்கு வருவதையொட்டி நேற்று இரவே விஜய், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் பட்டாசு வெடித்து தியேட்டர்கள் முன்பு குவிந்தனர்.
ரசிகர்கள் கொண்டாட்டம்
நள்ளிரவு 1 மணிக்கு அஜித்தின் துணிவு படம் திரையிடப்பட்டது. அதன்பிறகு விஜயின் வாரிசு திரைப்படம் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. முதல் நாளான இன்று அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் உற்சாகமாக துணிவு, வாரிசு படத்தை ரசித்தனர். இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாடி மகிழ்ந்தனர். துணிவு பொங்கல், வாரிசு பொங்கல் என இணையதளங்களில் பதிவுகள் செய்து டிரெண்ட் செய்தனர். சில இடங்களில் இரு ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது உள்பட சின்ன சின்ன அசம்பாவிதங்கள் ஏற்பட்டது.
சிறப்பு காட்சிகள் எப்போது?
இந்நிலையில் தான் பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14, பொங்கல் தினமான ஜனவரி 15, ஜனவரி 16, ஜனவரி 17 ஆகிய 4 நாட்கள் வழக்கமான காட்சிகளை விட கூடுதலாக ஒரு சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. திரைப்பட வினியோகஸ்தரர்கள், விடுமுறை தினத்தில் கூடும் கூட்டம், தியேட்டர் உரிமையாளர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் திரைப்பட வினியோகஸ்தரர்கள் கூடுதல் நாட்கள் சிறப்பு காட்சிகள் அனுமதி கோரினர்.
கூடுதலாக 3 நாட்கள் அனுமதி
அதன்படி இன்று தமிழக அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (ஜனவரி 12), நாளை மறுநாள் (ஜனவரி 13) மற்றும் ஜனவரி 18 ஆகிய 3 நாட்கள் தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விஜய், அஜித் ரசிகர்களுக்கு தமிழக அரசு குட்நியூஸ் கூறியுள்ளது.