3 ஆண்டில் மாறிய முடிவு.. PM SHRI பள்ளித் திட்டத்தை வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு
சென்னை: மூன்று ஆண்டுகளாக மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என சொல்லி வந்த தமிழக அரசு, வரும் 2024-25 கல்வியாண்டு முதல் PM SHRI பள்ளித்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. PM SHRI பள்ளித்திட்டத்தை வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
இதுபற்றி ஜோயல் லாரன்ஸ் என்ற நெட்டிசன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் என்பது கடந்த 2020ம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட திட்டம் ஆகும்.. இந்த திட்டத்தின் படி, கேந்திர வித்யாலயா பள்ளிகள், ஜவஹர் நவோதாய வித்யாலயா பள்ளிகள், மாநில அரசு பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகள் என மொத்தம் 14500 பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

இதில் கட்டமைப்பு மட்டுமல்ல, PM SHRI scheme-யினால் தரம் உயர்த்தப்படும் அனைத்து பள்ளிகளிலும் தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே தேசிய கல்விக் கொள்ளை 2020-யை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த பொழுது, அன்றைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய தமிழகத்தின் முதல்வருமான ஸ்டாலின் சிறப்பு கூட்டம் கூட்டி தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இதனிடையே 2021-யில் திமுக ஆட்சி அமைத்தவுடன் ஓய்வுபெற்ற நீதி அரசர் முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட உயர்மட்ட குழு மாநில கல்வி கொள்கையை வரைவு செய்வதற்காக அமைக்கப்பட்டது. முன்னதாக திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் புதிய தேசிய கல்விக் கொள்கையை ( NEP 2020-யை) முற்றிலும் நிராகரிக்கிறது என்று தெரிவித்திருந்தது. அந்த கொள்கையில் இருந்து தன் நிலைப்பாட்டை இப்பொழுது மாற்றிக் கொண்டுள்ளதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்

இதனிடையே பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தின் படி, 14500 பள்ளிகளை மேம்படுத்தும் பணியினை மத்திய அரசு மேற்கொள்ள போகிறது. PM SHRI திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசின் கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் 1.8 மில்லியன் மாணவர்கள் பயன் அடைவார்கள் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 6448 பள்ளிகளை மேம்படுத்த மத்திய அரசு ஏற்கனவே தேர்வு செய்திருக்கிறது. எனவே அடுத்த சுற்றில் தமிழக பள்ளிகள் தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பிஎம் ஸ்ரீ கல்வி திட்டத்தில் சேர்வது தொடர்பான ஏற்கனவே பல்வேறு மாநிலங்கள் இணைந்துள்ளன. இதில் ஒடிசா, மேற்கு வங்கம், கேரளா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் மட்டுமே பிஎம் ஸ்ரீ கல்வி திட்டத்தில் பள்ளிகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய கல்வி அமைச்சகத்துடன் இதுவரை கையெழுத்திடவில்லை.












Click it and Unblock the Notifications