தமிழகத்தில் இனி புதிய வீடுகளின் விலை உயரும்! நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு போச்சு
சென்னை: கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் முன்னறிவிப்பு ஏதும் இன்றி இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால் வீடுகளின் விலையும் உயரும் என கட்டுமானத் துறையினர் புகார் தெரிவித்துள்ளனர். இனி புதிதாக வீடு வாங்குவோருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பொதுவாக சொந்த ஊரில் வீடுகள் இருந்தாலும் தான் வசிக்கும் ஒரு இடத்தில் வீடு வாங்கி போட வேண்டும் என்பது பலருடைய கனவாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் நம் சொந்த காசில் 4 காசை சேர்த்து வைப்பது என்பதுதான். அது மட்டுமல்லாமல் தங்கத்தின் மீதும் மண்ணின் மீதும் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என கருதுகிறார்கள்.

ஆனாலும் சொத்து வரி, பதிவு கட்டணம், கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவைகளால் சிலர் வீடு வாங்கும் எண்ணத்தை கை விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கட்டட அனுமதி என்பது பெரும் குதிரைக் கொம்பாக இருக்கிறது. உள்ளாட்சியிலும் பிற துறைகளிலும் இந்த அனுமதி வாங்க 2 ஆண்டுகள் கூட ஆகும் நிலை உள்ளது.
சாதாரண குடியிருப்பு திட்டங்கள் முதல் அடுக்குமாடி கட்டடங்கள் வரை இதே நிலைதான் நீடிக்கிறது. இந்த நிலையில் கட்டுமானத் துறையின் கோரிக்கையை ஏற்று சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அண்மையில் தொடங்கியது.
அதன்படி 2500 சதுர அடி வரையிலான மனையில் 3500 சதுர அடி வரையில் வீடு கட்ட (மேல் தளமும் இருந்தால் இந்த 3500 சதுர அடி கணக்கு வரும்) சுயசான்று அடிப்படையில் ஆன்லைன் வழியாக உடனடியாக கட்டட அனுமதி வழங்கப்படும். இந்த திட்டத்தில் கட்டட அனுமதி வழங்க சென்னையில் ஏற்கெனவே இருந்த விகிதங்கள் அடிப்படையில் சதுர அடிக்கு 56 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என சென்னை மாநகராட்சி பரிந்துரைத்தது.
இதற்கான வரைவு அறிக்கை நகராட்சி நிர்வாகத் துறைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் நகராட்சி நிர்வாகத் துறையும் ஊரக வளர்ச்சி துறையும் வெளியிட்ட புதிய கட்டண விகிதங்கள் இதற்கு மாறாக இருந்தன. சென்னை மாநகராட்சியில் சதுர அடிக்கு ரூ 100 , பிற மாநகராட்சிகளில் எல்லாம் ஒரு சதுர அடிக்கு 74 ரூபாய் முதல் ரூ 88 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
அது போல் நகராட்சிகளில் 70 ரூபாய் முதல் 74 ரூபாய் வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. பேரூராட்சிகளில் சதுர அடிக்கு 45 முதல் 70 ரூபாய் வரையும் ஊராட்சிகளில் சதுர அடிக்கு 15 முதல் 27 ரூபாய் வரையும் அறிவிக்கப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகளில் 3500 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்குதான் புதிய கட்டணம் என பலரும் நினைத்தனர். ஆனால் ஒற்றை சாளர முறையில் கட்டட அனுமதி வழங்குவதற்கான கட்டணங்களையும் மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி 3500 சதுர அடிக்கு மேல் கட்டட அனுமதி கட்டணங்களில் மாற்றம் வந்துள்ளது. ஏற்கெனவே 8900 சதுர அடி கட்டடத்திற்கு அனுமதி வாங்க ரூ 4.5 லட்சம் செலுத்தி வந்த நிலையில் தற்போது இரு மடங்காக ரூ 9.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டியது உள்ளது. இதனால் புதிதாக கட்டண அனுமதி பெற விண்ணப்பிப்போர் இரு மடங்கு கட்டணத்தை செலுத்தும் நிலை உள்ளது. இந்த கட்டணத்தை கட்டுமான நிறுவனத்தினர் வாடிக்கையாளர்களிடம் இருந்தே வசூலிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் வீடுகளின் விலை உயரக் கூடும் என தெரிகிறது.
இந்த 9.5 லட்சம் ரூபாய் குறித்த பிரேக் அப்பில் கட்டட உரிம கட்டணம் 1,45,400 ரூபாய், வளர்ச்சி கட்டணம் 17,600 ரூபாய், உள்கட்டமைப்பு கட்டணம் ரூ 3,07,500, இதர வரைப்பட கட்டணம் 1,050, கழிவு நீர் வடிகால் சாலை வெட்டு ரூ 34,400, தண்ணீர் இணைப்பு சாலை வெட்டு 25,800 ரூபாய், மின் இணைப்பு சாலை வெட்டு 25,800 ரூபாய், சரி பார்ப்பு கட்டணம் 100, காப்புத் தொகை 1,64,100 ரூபாய், விளம்பர பலகை கட்டணம் ரூ 1500, தொழிலாளர் நல வாரியம் ரூ 2,30,900 என மொத்தம் ரூ.9,54,150 வசூலிக்கப்படும்.












Click it and Unblock the Notifications