மக்களே நோட் பண்ணுங்க.. டோல்கேட் ஓகே! பணிமனைகளில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது: தமிழக அரசு
சென்னை: ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு முனையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சில பேருந்துகள் அதற்கென உள்ள பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதாகவும், அப்படி செய்தால் கடுமையான நடவடிக்கை பாயும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் செல்லும் மக்களின் வசதிக்காகவும், சென்னைக்குள் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு கடந்த ஜனவரியில் பயன்பாட்டுக்கு வந்தது.

இப்பேருந்து முனையத்தில் 2,000க்கும் அதிகமான பேருந்துகள் வரை வந்து செல்லும், இது தவிர 270 கார்கள், 3,500 பைக்குகள் பார்க் செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு அதிக அளவிலும், மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு குறைவான அளவிலும் பேருந்துகள் இயக்கப்படும். அதன் பின்னர் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல ஆம்னி பேருந்துகளும் ஜனவரி 24ம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், "கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்" என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது.
மட்டுமல்லாது, "போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது" என்று தனது உத்தரவில் தெளிவுபடுத்தியிருந்தது.
எனவே, ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல கோயம்பேட்டிலிருந்து இயங்க தொடங்கின. இந்நிலையில் சில ஆம்னி பேருந்துகள் விதிகளை மீறுவதாகவும், அப்படி விதி மீறலில் ஈடுபடும் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.
அதாவது, ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்குவதை தவிர்க்குமாறு பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பான உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தவறாக புரிந்துகொண்டதாக குறிப்பிட்ட ஆணையர், போரூர், சூரப்பட்டு டோலில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதி என தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், விதிமீறும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications