தூள்.. தமிழக மக்களே.. பொங்கல் பரிசு ரூ.1000 ரொக்கம்! விரைவில் முதல்வரிடமிருந்து வருகிறது குட்நியூஸ்?
சென்னை: பொங்கல் பரிசு தொகையாக ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும். பொங்கல் பரிசுப் பை அல்லது பொங்கல் பரிசுத் தொகுப்பு என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட இத்திட்டம், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் ரொக்கம் வழங்குவதை அறிமுகப்படுத்தியது அதிமுக அரசுதான்.
தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரொக்கம் மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது. கடந்த ஜனவரியில் பொங்கல் தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
பொங்கல் தொகுப்பில் மோசடி..பருப்பு,பாமாயில் நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
2023 பொங்கல் பரிசுத் தொகை
2023ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கமாக பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பரிசுத் தொகையை நேரடியாக பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்துள்ளனர். வங்கியில் கணக்கு இல்லாதவர்கள், புதிதாக கூட்டுறவுத்துறை சார்பில் இயங்கும் மாவட்ட மத்திய வங்கிகளில், வங்கிக் கணக்கை தொடங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வங்கிக் கணக்கு தொடங்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
பொங்கல் பொருட்களுடன் ரூ.1000
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழக்கமான அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை மற்றும் கரும்புடன் பரிசுத் தொகையாக ரூ.1,000 வழங்குவது குறித்தும், அதை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வழங்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டது. வங்கிக்கணக்கு மூலம் வழங்கும்போது உரிய பயனாளிகளுக்கு தொகை சேருவது உறுதி செய்யப்படும் என்றும், பரிமாற்றம் எளிதாக இருக்கும் என்றும் நிதித்துறை ஆலோசனை வழங்கியது.
ரேசன் அட்டைகள்
இதையடுத்து, குடும்ப அட்டையுடன் வங்கிக்கணக்கு, ஆதார் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, 2.23 கோடி குடும்ப அட்டைகளில் 14 லட்சத்து 86 ஆயிரத்து 582 அட்டைகளில் வங்கிக்கணக்கு, ஆதார் இணைக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை இணைக்கும் வகையிலான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணி தற்போது நடைபெற்று வருகிறது.
கையில் பணம்
இதனிடையே, அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை மற்றும் கரும்புடன் ரூ.1,000 வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கு ரொக்கமாக 1,000 ரூபாயை நேரடியாக வழங்கலாம் என அதிகாரிகள் தரப்பில் அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையை அரசு தரப்பும் ஏற்கும் என தெரிகிறது. இதன் அடிப்படையில், விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருணாநிதி தொடங்கிய பொங்கல் பரிசுப்பை
கடந்த 2009ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு முன்பாகத்தான் முதன்முதலாக பொங்கல் பரிசுப் பை திட்டத்தை அன்றைய முதல்வர் கருணாநிதி தொடங்கினார். சத்துணவுத் திட்டம்போல இதுவும் ஒரு கவர்ச்சிக்கரமான திட்டமாக மாறும் என்பதை, அன்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 2008ஆம் ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டை தை முதல் தேதிக்கு திமுக அரசு மாற்றியிருந்தது. அதையொட்டிதான் இத்திட்டம் முதன்முறையாகத் தொடங்கப்பட்டது. அப்போது அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், பருப்பு, முந்திரி, திராட்சை 20 கிராம் என்ற அளவில்தான் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது இத்திட்டத்துக்கு ஆன மொத்த செலவு 80 கோடி ரூபாய். இத்திட்டம் திமுக ஆட்சியில் இருந்த 2011 பொங்கல் வரை செயல்படுத்தப்பட்டது.
ஜெயலலிதா கொடுத்த 100 ரூபாய்
2011 அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2012ஆம் ஆண்டில் பொங்கல் பரிசுப் பை எதுவும் வழங்கப்படவில்லை. 2013ஆம் ஆண்டில் பொங்கல் திருநாளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை மீண்டும் அறிவித்து ஆச்சரியமூட்டினார் ஜெயலலிதா. அரை கிலோவாக இருந்த பச்சரிசி, சர்க்கரை 1 கிலோவாக உயர்த்தப்பட்டது. கரும்புடன் 100 ரூபாய் முதன்முறையாக ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நேரம் என்பதால், அந்த ஆண்டிலும் 100 ரூபாய் ரொக்கத்துடன் இத்திட்டம் தொடர்ந்தது. அப்போது இத்திட்டத்துக்கான செலவு 280 கோடி ரூபாய்.
2016ல் மீண்டும் பொங்கல் பரிசு
2014 செப்டம்பர் 27 அன்று ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்குச் சென்றதால், முதல்வர் பதவியை இழந்தார். முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அதிமுகவினர் எல்லோரும் துயரகரமான தருணத்தில் இருந்தனர். அதன் வெளிப்பாடாக 2015ஆம் ஆண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்படவேயில்லை. ஆனால், 2015 மே மாதத்தில் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். 2016ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஆண்டு. அந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் மீண்டும் அறிவிக்கப்பட்டது. அதோடு 100 ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது.
ரூ. 1000 ரொக்கம் அறிவித்த இபிஎஸ்
2016 டிசம்பர் 5ஆம் நாள் ஜெயலலிதா உயிரிழந்தார். முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் 2017ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார். ஆனால், 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்படவில்லை. இதன்பின்னர் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, 2019 பொங்கல் பண்டிகைக்குதான் பொங்கல் பரிசுத் தொகுப்போடு 1,000 ரூபாய் ரொக்கத்தையும் அறிவித்தார். 2020ஆம் ஆண்டிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பும், 1,000 ரூபாய் ரொக்கமும் வழங்கும் திட்டம் தொடர்ந்தது.
ரூ.2500 அள்ளிக்கொடுத்த இபிஎஸ்
2021ஆம் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவில் பொங்கல் பரிசுத் தொகுப்போடு 2,500 ரொக்கமும் அறிவித்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்காக இவ்வளவு பெரிய தொகை வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டுக்கும் விமர்சனத்துக்கும் அது வழிவகுத்தது.
விரைவில் குட் நியூஸ்
இந்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து இந்த ஆண்டு வழக்கம் போல பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 1,000 ரூபாய் பரிசுத் தொகை அறிவிப்பால், ரேஷன் கார்டுதாரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.