இந்து தர்மத்தை மலேரியா வைரஸ்னு சொல்வது துர்பாக்கியம்! ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்
தேவக்கோட்டை: இந்து தர்மத்தை டெங்கு, மலேரியா, வைரஸுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம் என சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே கண்டதேவியில் நடந்த ஒரு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார்.

கண்டதேவியில் நடந்த சமுதாய நல்லிணக்க கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ஆங்கிலேயர்கள் அமெரிக்கா, கனடா நாடுகளில் அடித்தட்டு மக்களிடையே பிரித்தாளும் முறையை செயல்படுத்தியிருந்தனர்.
இந்தியாவில் அந்த வழியை பின்பற்ற முடியவில்லை. இந்தியா பெரிய நாடாக இருந்தாலும் சமூகத்தினர் ஒற்றுமையாக இருந்தனர். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி தேசிய ராணுவம் அமைத்த போது தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் இணைந்தனர்.
இந்த சூழ்நிலையில்தான் இந்தியர்களை, ஆங்கிலேயர்கள் எப்படி பிரித்தாளுவது என யோசித்தனர். இந்த மக்களை எது ஒன்றுபடுத்துகிறது என்பதையும் சிந்தித்ததில் அவை கோயில்கள் என கண்டுபிடித்தனர். மக்களின் அனைத்து வாழ்வியலிலும் கோயில்கள்தான் மையமாக இருந்தன என்பதை தெரிந்து கொண்டனர்.
எனவே கோயில்களை பலவீனப்படுத்தினால், ஒற்றுமையை உடைத்து, இவர்களது சமூகத்தை பலவீனப்படுத்த முடியும் என முடிவு செய்திருந்தனர். கோயில்களை நிலங்கள், சொத்துக்கள் மூலம் வருவாய் ஏற்படுத்தி நிர்வகித்தனர்.
அதனால் கட்ட முடியாத வகையில் வரிகளை அதிகப்படுத்தி முடக்கினர். ஜாதிகளுக்குள்ளும் பிரிவினை ஏற்படுத்தினர். அதுவும் சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் செயலை செய்தனர் என்பதில் ஆச்சரியமில்லை.
ஆனால் சுதந்திரத்திற்கு பிறகும் ஆட்சியில் இருப்பவர்கள் பிரித்தாளும் செயலை செய்வதுதான் ஆச்சரியமாக உள்ளது. இந்த நாட்டில் இந்து தர்மத்தை, சனாதனத்தை, பக்தியை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிடுவதை துர்பாக்கியத்தோடு பார்க்கிறோம்.
பக்தி என்பது அறிவியலாகும். சிலர் பக்திக்கும் அறிவியலுக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள். இந்தியா முழுவதும் சிவன், சக்தி , பெருமாளை வணங்கிய பக்தர்கள் அறிவியலை வளர்க்கவில்லையா? சிலர் கோயில்கள் ஒழிய வேண்டும் என்றும் பக்தர்கள் கோயில்களுக்கு செல்வதை மறக்க வேண்டும் என்றும் முயற்சிக்கிறார்கள் என ஆளுநர் ரவி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக இளைஞரணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை காமராஜர் அரங்கில் நடந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சனாதன எதிர்ப்பு மாநாடு என போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை ஒழித்துத்தான் ஆக வேண்டும். எதிர்க்க முடியாது.
கொசு, டெங்கு, காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் சனாதனம். அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரணம் ஆகும்.
சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரானது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எதுவுமே நிலையானது கிடையாது.
நமது கலைஞர் அவரது நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் அவரது அப்பா முத்துவேல், கலைஞருடைய 5ஆவது வயதில் பள்ளிக் கூட கல்வியுடன் சேர்த்து இசைக் கல்வியும் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார்கள் என எழுதி இருக்கிறார். ஆனால் இசையைப் பள்ளியில் சேர்ந்து கற்றுக் கொள்வதற்கு கலைஞருக்கு ஈடுபாடும் இல்லை. ஆர்வமும் இல்லை. அதற்கான காரணத்தையும் அவர் அந்த நெஞ்சுக்கு நீதி நூலில் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு உதயநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications