சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார்- தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக வன்முறை அதிகம்- ஆளுநர் ரவி
சென்னை: சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார்; தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நிகழ்கின்றன; தமிழகத்தில் சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும் எனில் வள்ளலார் வழியைப் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய ஆளுநர் ரவி, கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சமூக நீதியைப் பற்றி பேசுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் தலித்துகள் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகின்றனர்.
சமூகநீதியைப் பற்றி பேசுகிற தமிழ்நாட்டில்தான் தினமும் தலித்துகள் மீதான வன்முறைகளும் அதிகரிக்கின்றன. தமிழ்நாட்டில் இன்றைக்கும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன. சமூக நீதியைப் பாதுகாக்க வள்ளலார் வழியைத்தான் பின்பற்ற வேண்டும்.
வள்ளலார்தான் சனாதான தர்மத்தைப் பாதுகாத்து மீட்டவர்; ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சமஸ்கிருதத்தை அழித்து ஆங்கில மொழியை மேம்படுத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால் வள்ளலார்தான் இதனை மீட்டார். தமிழ்நாட்டில் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளால் வலிகள் ஏற்படுகின்றன. இவ்வாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.












Click it and Unblock the Notifications