கோயம்பேடு டூ பட்டாபிராம் மெட்ரோ.. தொடங்கியது பணிகள்.. பல கிமீக்கு விரியும் சேவை! சூப்பர் அறிவிப்பு
சென்னை: கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,442 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தல்
உள்ளிட்ட பணிகளைத் தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை 21.76 கி.மீ தூரத்திற்கு இந்த புதிய வழித்தடம் அமையவுள்ளது. இந்த வழித்தடம், கோயம்பேடு, ஆவடி மற்றும் பட்டாபிராம் ஆகிய முக்கிய பகுதிகளை இணைக்கும். இது சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு, பயண நேரத்தையும் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம், நகரின் மேற்குப் புற வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக அமையும்.ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நகரத்தின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக இரண்டு புதிய வழித்தடங்களுக்கான விரிவான திட்ட
அறிக்கைகளைத் தயாரிக்க ஆலோசனை ஒப்பந்தங்களை வெளியிட்டுள்ளது. இதில், கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர் நீதிமன்ற மெட்ரோ வரையிலான வழித்தடம் 4-ன் நீட்டிப்பு மற்றும் தாம்பரம்-கிண்டி-வேளச்சேரி புதிய வழித்தடம் ஆகியவை அடங்கும்.

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோவின் அறிவிப்பின்படி, வழித்தடம் 4-ன் நீட்டிப்பு சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு அமையும். இது மெரினா கடற்கரை மற்றும் தலைமைச் செயலகத்திற்கு மெட்ரோ இணைப்பை வழங்குவதன் மூலம் தினசரி பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் எளிதான அணுகலை ஏற்படுத்தும். இதன்மூலம் நகரப் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு முக்கிய திட்டமாக, தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான சுமார் 21 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடம் அமைகிறது. இது தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற புறநகர்ப் பகுதிகளை சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 1-ல் உள்ள கிண்டி மெட்ரோ நிலையத்துடன் இணைக்கும். இந்தப் புதிய வழித்தடம் பல போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வசதியுடன் உருவாக்கப்படும்.
இந்த இரு திட்டங்களுக்கும் விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிக்கும் ஆலோசனை ஒப்பந்தம் M/s Systra MVA Consulting India Pvt நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம் முதல் உயர் நீதிமன்ற மெட்ரோ வரையிலான வழித்தடம் 4-ன் நீட்டிப்பு திட்ட அறிக்கை தயாரிப்பிற்காக ₹38.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான திட்ட அறிக்கைக்காக ₹96.19 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம்
இந்த விரிவான திட்ட அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 120 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. எம்.ஏ. சித்திக், இ.ஆ.ப., முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. டி. அர்ச்சுனன் மற்றும் Systra MVA Consulting IndiaPvt நிறுவனத்தின் உயர் துணைத் தலைவர் திரு. பர்வீன் குமார் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் திரு. டி. லிவிங்ஸ்டோன் எலியாசர், திருமதி. ரேகா பிரகாஷ், டாக்டர். டி. ஜெபசெல்வின் கிளாட்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். இந்தத் திட்ட அறிக்கைகள், வழித்தட பாதை அமையும் இடங்கள், பயணிகளின் எண்ணிக்கை, பல போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை விரிவாக மதிப்பிடும்.
இந்த ஆய்வுகள், எதிர்கால திட்டச் செயலாக்கத்திற்கும், தகவலறிந்த முடிவெடுப்பதற்கும் ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், நிலையான நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த திட்டங்கள் உதவும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டது.












Click it and Unblock the Notifications