‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு! முழு விவரம்!
சென்னை: 'முதல்வர் மருந்தகம்' அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பி.பார்ம்/ டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது சான்று பெற்றவர்களின் ஒப்புதலுடன் "முதல்வர் மருந்தகம்" அமைக்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒரு புதிய திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை எளியோருக்கு, சிறப்பான சிகிச்சைகளும் தரமான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குத் தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதால், இவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் இவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில், முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும்.
இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும் என அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில், 'முதல்வர் மருந்தகம்' அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்; B.Pharm/D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்கள் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் 15.08.2024 அன்று சுதந்திர தின விழா உரையில் ஜெனரிக் மருத்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக 29.10.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் ஆகியோருக்கு உரிய அறிவுரைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருத்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால், மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மேற்படி இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications