பெண்களுக்கு சூப்பர் செய்தி.. மேலும் 6 இடங்களில் வருகிறது ‘தோழி’ ஹாஸ்டல்.. எங்கெங்கே தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 6 இடங்களில் தோழி மகளிர் விடுதிகளை கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. 1,200 பெண்கள் தங்கும் வகையில் மேலும் 6 இடங்களில் தோழி மகளிர் விடுதிகள் கட்டப்பட உள்ளன.
சென்னையில் 2 இடங்களிலும், ராமநாதபுரம், திண்டுக்கல், கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு விடுதியும் அமைக்கப்படுகிறது. ரூ.70 கோடி செலவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

பெண்கள் தங்கும் விடுதி
சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் பெண்கள் பலர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு வெளியூர்களில் தங்கி பணிபுரியும் பெண்கள் பெரும்பாலும் தனியார் பெண்கள் விடுதிகளில் அதிக வாடகை கொடுத்து தங்க வேண்டி உள்ளது.
குறைந்த வாடகையில் நல்ல வசதிகளோடு கூடிய தங்குமிடம் அமைத்துத் தர வேண்டும் என்பது வேலை செய்யும் பெண்களின் நெடுநாள் கோரிக்கையாக உள்ளது. இதை நிறைவேற்றி வருகிறது தமிழக அரசு. பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழக அரசு தோழி மகளிர் விடுதி என்ற உணவு, உறைவிட விடுதி வசதியை மிகவும் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியது.
தோழி மகளிர் விடுதிகள்
தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு தோழி விடுதி திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. சென்னை, வேலூர், விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தோழி விடுதிகள் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
24 மணி நேர குடிநீர், வைஃபை, சுகாதாரமான கழிவறை என தனியார் விடுதிகளுக்கு இணையான வசதிகள் தோழி விடுதியில் வழங்கப்படுகிறது. 24 மணி நேரமும் கண்காணிக்கும் பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளோடு பாதுகாப்பு அம்சங்களும் இங்குள்ளன.
வாடகை குறைவு
இந்த விடுதிகளில் மாத அடிப்படையில், நாள் கணக்கில் பெண்கள் தங்கி கொள்ளலாம். தனியார் விடுதிகளை விட வாடகை மிகவும் குறைவு. சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்ட இந்த விடுதிகளுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் புதிதாக மேலும் 6 இடங்களில் தோழி மகளிர் விடுதி அமைக்க ரூ.70 கோடி செலவில் கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரி உள்ளது. இதில் 1200 பெண்கள் தங்கும் வகையில் ராமநாதபுரம், திண்டுக்கல், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் தலா 1 விடுதி அமைய உள்ளது. மேலும், 950 பேர் தங்கும் வகையில் 2 விடுதிகள் சென்னையில் அமைக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications