தமிழகத்தில் ஏப்.10 முதல் எதற்கெல்லாம் தடை.. எதற்கெல்லாம் கடும் கட்டுப்பாடுகள்.. முழு விவரம்
சென்னை: ஏப்ரல் 10ஆம் தேதியில் இருந்து கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது., இதேபோல் தமிழகத்தில் கோயில் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில், 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தற்போது நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் இதரவெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பொதுஊரடங்கு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் 30.4.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (except containment zone) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்க ஆணையிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நடாக, சத்தீஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில், கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அதேபோன்று தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற காரணங்களினாலும் மற்றும் பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவதை தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறுவதாலும் சமீப காலத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதை காணமுடிகிறது. குறிப்பாக 28.3.2021அன்று 1370 நபர்கள் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 07.4.2021 அன்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 27743 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் கடந்த 05.04.2021 அன்று சுகாதாரத்துறை , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட முக்கியமான துறையின் உயர் அலுவலகர்களுடனும், மாவட்ட ஆட்சி தலைவர்களுடனும் ஆய்வு நடத்தி உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீவிரப்படுத்தவும் , ஆர்டிபிசிஆர் சோதனைகளை அதிகப்படுத்தவும், தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுப்படுத்தவும் அறிவுரைகளை வழங்கியதை அடுத்து தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இதன் தொடர்ச்சியாக தற்போது நாளொன்றுக்கு சுமார் 80,000 ஆர்டிபிசிஆர் பரிசோதகைள் செய்யப்படுவதோடு, நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத கூட்டங்கள் தடை
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால் இதற்கான தடை தொடரும்.தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்(containment zones) தற்போதுள்ள நடைமுறைகளின் படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.நோய் பரவலைக் கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடை விதிக்கப்படுகிறது.

சில்லறை வணிகம் தடை
10.4.2021 முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. அதே போன்ற மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லறை வியாபார கடைகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது.

நடவடிக்கை உறுதி
மேலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறைகளை 10.4.2021 முதல் அமலுக்கு வரும். நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்ப நிலை (thermal scanning) பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் (hand sanitizer) உபயோகப்படுத்துவதையும். முகக்கவசம அணிவதையும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும், முகக் கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயம் அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும்.தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்க தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிருவாகம் செய்ய வேண்டும். மேலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நின்று பயணிக்க கூடாது
நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி மாவட்டகங்ளுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும், பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, புதுச்சேரி, ஆந்திரா, மற்றும் கர்நாடகம் செல்லும் பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும், பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

உணவங்கள்
முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, காய்கறிகடைகள், பலசரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரும்கள், பெரிய கடைகள்(நகை,ஜவுளி) ஒரே நேரததில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் மொத்த இருக்கைளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். மேலும் இரவு 11 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்படும். கேளிக்கை விடுதிகள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

பொழுதுபோக்கு பூங்காக்கள்
பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்படஅனுமதிக்கப்படும். நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் (multiplex) வணிக வளாகத்தில் (shopping malls) உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்.

திருமண நிகழ்வு
நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி உள் அரங்குகளில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படும். திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும் இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும். விளையாட்டு போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடத்த அனுமதி அளிக்கப்படும்.
நீச்சல் குளங்கள் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். பொருட்காட்சி அரங்கங்களுக்கு நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி அனுமதிக்கப்படும்.

சின்னத்திரை
வழிபாட்டு தலங்களில் இரவு 8மணி பொதுமக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படும். இருப்பினும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்படும். ஆனால் அனைவரும் ஆர்டிபிஆர் சோதனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்,.

ஆட்டோ ஓட்டுநர்கள்
வாடகை மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் ஓட்டுநர் தவிர்த்து 3 பேருக்கு மேல் பயணிக்க அனுமதி இல்லை. இந்த உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்." இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications