ரயிலில் நெரிசல்! வாரணாசி டூ சென்னை.. மாற்றுத்திறனாளி வீரர்களை விமானத்தில் அழைத்து வந்த தமிழக அரசு
சென்னை: விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வாரணாசி சென்றிருந்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள், போட்டியை முடித்துவிட்டு கும்பமேளா நெரிசலால் ரயிலில் சென்னை திரும்ப முடியாமல் தவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களை விமானம் மூலம் 1 மணி நேரத்தில் சென்னைக்கு தமிழ்நாடு அரசு அழைத்து வந்திருக்கிறது.
சென்னை வந்த விளையாட்டு வீரர்கள் தமிழக அரசுக்கும், விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

வாரணாசியில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழகம் சார்பில் 6 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இங்கிருந்து சென்றபோது எந்த பிரச்சனையும் இல்லை. டிக்கெட் புக் செய்யப்பட்டு போதுமான வசதிகளுடன் சென்றிருந்தனர். ஆனால், அங்கிருந்து திரும்ப முயன்றபோதுதான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
வாரணாசியிலிருந்து சென்னைக்கு வர முன்பே டிக்கெட் புக் செய்திருந்தும், ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்திருக்கிறது. எனவே, விளையாட்டு வீரர்களால் ஏற முடியவில்லை. உதவிக்கு காவலர்களையும், துணை ராணுவ வீரர்களையும் அழைத்தும் கூட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே வேறு வழியின்றி இந்த விவகாரத்தை ஊடகங்கள் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். பின்னர் தமிழ்நாடு அரசு கவனத்திற்கும் இந்த விஷயம் சென்றிருக்கிறது.
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில், 6 வீரர்களும் உடனடியாக விமானம் மூலம் வாரணாசியிலிருந்து சென்னைக்கு அழைத்துவரப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து பேட்டிளித்த வீரர், "போட்டியில் வெற்றி பெறுவதுதான் எங்களுக்கு மிகப்பெரிய போராட்டமாக இருக்கும். ஆனால் பத்திரமாக வீடு திரும்புவது இன்று பெரிய போராட்டமாக இருந்தது. சென்னைக்கு வருவது குறித்து சிக்கல் இருப்பதை நாங்கள் உடனடியாக மீடியாக்களுக்குதான் தகவல் தெரிவித்தோம். இந்த தகவல் சொல்லி 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் தமிழக அரசு தரப்பிலிருந்து அழைப்பு வந்தது.
முதல்வர் எங்களை பத்திரமாக அடுத்து வரச் சொல்லி உத்தரவிட்டிருப்பதாக பேசினார்கள். ஏழு மணிக்கு நாங்கள் உதவி கேட்டு ஒருவர் ஒருவராக தொடர்பு கொண்டு இருந்த நேரத்தில் 8 மணிக்கெல்லாம் தமிழ்நாடு அரசு சார்பில் எங்களிடம் பேசி விமானம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஒரு மணி நேரத்தில் எங்களுடைய பிரச்சனைகள் தீர்ந்து விட்டன. எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விமான பயணம் குறித்து அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான விமான போக்குவரத்து வசதிக்கான உதவித்தொகை தமிழ்நாட்டில் வழங்கப்பட்டால் அது மொத்த நாட்டுக்குமான முன்மாதிரியாக இருக்கும். எங்கள் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications