மெகா சிக்சர் அடித்த ஸ்டாலின்..ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.3000! வெளியான அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பணமும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். நாளை முதல் டோக்கன் வழங்கப்பட்டு ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கும் என தகவல் வெளியானது.
கடந்த சில நாட்களாகவே, இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்படுமா? இல்லையா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்து வந்தது. காரணம், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு
ஆனால், ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. அதற்கு முன்பு 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் திமுக அரசு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கப் பணத்தையும் வழங்கி வந்தது. அதற்கு முன்பாக 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டிருந்ததால், இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் மீண்டும் ரொக்கப் பணம் வழங்கப்படலாம் என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
ரேஷன் அட்டைதாரர்கள்
இந்த நிலையில், சமீபத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியானது. அந்த அரசாணையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்க மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த ஆண்டு ரொக்கப் பணம் கிடையாதா? என்ற கேள்வி மீண்டும் எழுந்தது. இந்த சூழலில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறின.
3 ஆயிரம் ரொக்கம்
அந்த ஆலோசனையின் முடிவில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். மேலும், வரும் 8ஆம் தேதி முதல் இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைப்பார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு முன்பாக, ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன்களை வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட உள்ளது.
பொங்கல் நிதியுதவி
திட்டம் தொடங்கிய உடன், தமிழக முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கும் பணி தொடங்கும். தினமும் சுமார் 400 ரேஷன் கார்டுகளுக்கு பொருட்களும் ரொக்கப் பணமும் வழங்கப்படுமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 14ஆம் தேதிக்குள் அனைத்து தகுதியான அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பும் ரூ.3,000 ரொக்கப் பணமும் வழங்கி முடிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், கடந்த ஆண்டு ரொக்கப் பணம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த பொதுமக்கள், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் மீண்டும் பணம் வழங்கப்படுவது குறித்து மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications