தமிழ் இணையம் 99.. 25 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் நாளை முதல் பன்னாட்டுக் கணித் தமிழ் மாநாடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு பன்னாட்டு கணித் தமிழ் மாநாடு நடைபெற உள்ளது. தமிழ் இணையம் 99 மாநாடு நடைபெற்று 25 ஆண்டுகளுக்கு பின்னர் அதே நாளில் சென்னையில் கணித் தமிழ் 24 மாநாடு நடைபெறுகிறது.

1999-இல் தமிழ்நாடு முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது தமிழ் இணையம் 99 நடத்தப்பட்டது. தமிழ்நாட்டிலும் உலகத் தமிழர்களிடையேயும் இணையம் என்பது அறிமுகமாகி இருந்த காலம். தமிழ் எழுத்துருக்கள் இன்று போல யுனிகோடு வடிவம் பெறாத சூழ்நிலை. ஒவ்வொரு நிறுவனமும் தமிழ் எழுத்துருக்களை தயாரித்து தனித்தனியே பயன்படுத்திய தொடக்க காலத்திலேயே முதல்வராக இருந்த கருணாநிதி பல்வேறு ஆய்வுகளைக் கொண்ட தமிழ் இணையம் 99 மாநாட்டை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்தினார். தமிழ் இணைய உலகத்துக்கு அம்மாநாடு பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது.

Tamil Nadu govts KaniTamil 24 conference to begin from tomorrow in Chennai

இதனைத் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் தமிழ்நாடு அரசு, தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் கணித் தமிழ்24 என்ற பெயரில் பன்னாட்டு கணித் தமிழ் மாநாட்டை நடத்த உள்ளது. இன்றைய இணைய உலகம் 25 ஆண்டுகளில்- கால் நூற்றாண்டில் பல ஆயிரம் மடங்கு வளர்ச்சியை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது. ஆகையால் வளர்ந்து வரும் புதிய தொழில் நுட்பங்கள், இத்தொழில் நுட்பங்களில் தமிழ் மொழிக்கான இடம் உள்ளிட்டவை குறித்து விவாதித்து ஆராய்ந்து முடிவெடுகள் எடுக்கவே பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்துகிறது Natural Language Processing Tools (NLPT), Artificial Intelligence, Machine Learning, Machine Translation (MT), Sentimental Analysis (SA), Large Language Model (LLM), Automatic Speech Recognition (ASR) போன்றவற்றைத் தமிழில் உருவாக்குவது தொடர்பாகவும் இம்மாநாடு ஆராய உள்ளது.

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை இம்மாநாடு நடைபெறும். இணைய உலகில் தமிழுக்காகப் பங்களித்து வரும் அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தமிழ் ஆர்வலர்கள் இம் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இணையம் 99 மாநாடு நடைபெற்ற அதே நாளில்தான் கணித் தமிழ் மாநாடும் நடைபெற உள்ளது.

இந்த மாநாடு தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.kanitamil.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

இம்மாநாடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் இணையம் 99' மாநாட்டின் விளைவாக உருவானதுதான் தமிழ் இணையக் கல்விக்கழகம். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்றுக்கொடுத்தல், தமிழ் நூல்களையும் இதழ்களையும் அரிய ஆவணங்களையும் மின்னுருவாக்கம் செய்தல், கணினித் தமிழை மேம்படுத்துதல் ஆகியவை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் முதன்மையான பணிகளாகும். மேலும், மாநாட்டில் பங்குபெற்ற வல்லுநர்களின் வழிகாட்டுதலோடு 'தமிழ்99 விசைப்பலகை' உருவாக்கப்பட்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழில் மென்பொருட்களை உருவாக்குவது தொடர்பான செயல்களைத் தமிழக அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில், 'தமிழ்இணையம்99' மாநாட்டுக்குப் பிறகான காலகட்டத்தில் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் வளர்ச்சி அபரிமிதமானது. செயற்கை நுண்ணறிவு குறித்து கடந்த நூற்றாண்டின் இறுதியிலேயே நாம் பேசத் தொடங்கிவிட்டாலும் அண்மைக் காலத்தில்தான் அது முழுவீச்சில் களம் கண்டிருக்கிறது. எனவே, வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் தமிழுக்கான இடத்தினை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் வழியாக, தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியின் பயன்பாடு அதிகரிப்பதற்கான சூழலை ஏற்படுத்த இயலும். புதிய தலைமுறையை இதன் பக்கம் திருப்ப இயலும்.

தமிழறிஞர்கள், மொழித் தொழில்நுட்ப வல்லுநர்கள், மொழித் தொழில்நுட்பத்தை உருவாக்கும் மற்றும் பயன்படுத்தும் நிறுவனங்களைச் சேர்ந்த ஆளுமைகள் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் விரிவுரை வழங்குவார்கள். ஆளுமைகளுக்கு இடையேயான குழு விவாதங்களும் நடத்தப்படும். செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல், இயற்கை மொழிச் செயலாக்கம், மொழி மாதிரிகள், நவீன மொழித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் உரைகளும் குழு விவாதங்களும் நடைபெறும்.

உலகெங்கிலும் கணினித்தமிழ் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுவருபவர்களிடமிருந்தும், தமிழ் மொழி மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் மொழி சார்ந்த மென்பொருள் உருவாக்குவோரிடமிருந்தும் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, புத்தகமாகத் தொகுக்கப்படும். இயற்கை மொழிச் செயலாக்கம், இயந்திர மொழிபெயர்ப்பு, பேச்சுகளைப் புரிந்துகொள்ளல், உணர்வுப் பகுப்பாய்வு உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறும்.

இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் என இரண்டு விதமாக நிரலாக்கப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் வழியாக இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் வழங்கப்படுவதோடு, சிறந்த முயற்சிகளுக்கான அங்கீகாரமும் வழங்கப்படும். கண்காட்சி: மொழித் தொழில்நுட்பங்கள் தொடர்பான அதிநவீனத் தயாரிப்புகள், திட்டங்கள், புதிய சிந்தனைகள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் விதமாகக் கண்காட்சி அமையும்.

தொழில் துறையைச் சேர்ந்தவர்கள், புத்தொழில் (Startup) நிறுவனத்தினர் ஆகியோர் இதில் பங்கேற்பார்கள். தொழில்நுட்பத்தில் மொழியின் முக்கியத்துவம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் காலம் இது. அதன் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொண்டுவரும் நிகழ்வாக இந்த மாநாடு நடைபெறும். செயற்கை நுண்ணறிவு (AI), அதிகளவில் மொழி மாதிரிகளை உருவாக்குதல் (LLM), டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம், கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பம், மின் ஆளுமை உள்ளிட்ட தளங்களில் நடைபெறவிருக்கும் இந்தப் பன்னாட்டு மாநாடு அடுத்துவரும் சவாலான தொழில்நுட்ப யுகத்தை எதிர்கொள்வதற்கான அடித்தளங்களை அமைத்துத்தரும்.

மேலும், இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் கணித்தமிழ் தொடர்பாக நடந்திருக்கும் விவாதங்கள், முயற்சிகள், முன்னெடுப்புகள் முதலியவற்றை உள்ளடக்கிய சிறப்பு மலர் ஒன்றும் இந்தப் பன்னாட்டு மாநாட்டில் வெளியிடப்படும். இம்மாநாட்டுக்கென பிரத்யேக இலச்சினை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த மாபெரும் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு தமிழ் மொழியைக் காப்பதற்கும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கும் ஒரு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். இந்தியாவில் வேறெந்த மாநிலமும் மொழிக்காக முன்னெடுக்காத ஒரு திட்டத்தை முன்னோடியாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+