பணியிலுள்ள ஏடிஜிபியே கைதானது தமிழகத்தில் இதுதான் முதல் முறை! சிறை சென்ற ஐபிஎஸ் அதிகாரிகள் லிஸ்ட் இதோ
சென்னை: தமிழ்நாட்டில் பணியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து, அவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் மிக அரிதானவை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், இப்படியான மூன்று முக்கியமான சம்பவங்கள் மாநில காவல் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
ஆர்.வி. வருண்குமார் (2014)
2010-ம் ஆண்டு யூபிஎஸ்சி தேர்வில் மூன்றாம் இடம் பெற்றவராக, விருதுநகர் மாவட்டத்தில் உதவி கண்காணிப்பாளர் (ASP) பதவியில் பணியாற்றிய ஆர்.வி. வருண்குமார் மீது முன்னாள் நெருங்கிய தோழி பிரியதர்ஷினி, திருமணத்துக்கு முன் ரூ.50 லட்சம், 2 கிலோ தங்கம், BMW கார் ஆகியவை வரதட்சணையாக கேட்டதாக புகார் அளித்தார். வழக்கு விசாரணையின் போது, அவரது முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால், அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து, நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டார். அவர் பணியில் இருந்தபோது கைது செய்யப்பட்ட இந்த சம்பவம், தமிழகத்தில் பணியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு பதியப்பட்டு, நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்ட முக்கிய நிகழ்வாகும்.

சஃபீர் கரீம் (2017)
2014-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி சஃபீர் கரீம், திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றியபோது, சென்னை நகரில் யூபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். தேர்வு மையத்தில் மினி செல்போன், ஸ்பை கேமரா, வயர்லெஸ் இயந்திரம் ஆகியவற்றை பயன்படுத்தி, தனது மனைவியிடம் இருந்து பதில்கள் பெற்றதாக போலீசார் தெரிவித்தனர். தேர்வு முடிந்ததும் உடனே அவர் கைது செய்யப்பட்டார். இது, பணியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி நேரடியாக மோசடிக்காக கைது செய்யப்பட்ட சம்பவமாகும்.
ஏ.டி.ஜி.பி. ஜெயராம் (2025)
இந்த நிலையில், இன்று, சென்னை ஹைகோர்ட், சிறுவன் கடத்தல் வழக்கில், தமிழக கூடுதல் காவல் இயக்குநர் (ADGP) ஜெயராமை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது. கடத்தலுக்கு அவரது வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும், வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜெயராமின் தொடர்பை ஒப்புக்கொண்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. நீதிபதி நேரடியாக ஜெயராமை நீதிமன்றத்தில் வரவழைத்து, போலீசாரால் கைது செய்ய உத்தரவிட்டார். இது தமிழக காவல் வரலாற்றில், பணியில் இருக்கும் மிக உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் சம்பவமாகும்.ஐபிஎஸ் அதிகாரிகளை கைது செய்த சம்பவங்களின் உதாரணங்கள் இருந்தபோதிலும், ஏடிஜிபி அளவிலுள்ள ஒரு அதிகாரி கைதானது இது முதல்முறையாக பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக இதை எதிர்க்கட்சிகள் எடுக்கத் தொடங்கியுள்ளன.
வழக்கின் பின்னணி
தனுஷ் என்ற இளைஞர், தனது காதலியின் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து, இருவரும் தலைமறைவாக இருந்தனர். இதைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் சிலர், தனுஷின் வீட்டில் வந்து, அவரது தம்பியை கடத்திச் சென்றனர். பெண்ணின் தந்தை, குடும்பத்தினர், முன்னாள் பெண் போலீசார், வழக்கறிஞர் மற்றும் சிலர் இந்த கடத்தலில் நேரடி பங்கு வகித்தனர். போலீசார் போல நடித்து, சிறுவனை கடத்திச் சென்றிருந்தனர்.
போலீசார் விசாரணையில், இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் அதிகாரப்பூர்வ வாகனம் பயன்படுத்தப்பட்டது என்றும், அந்த அதிகாரி ஜெயராமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.இதன் அடிப்படையில், ஜெயராமும், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ ஜகன்மூர்த்தியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்த விசாரணையின்போது, ஜெயராமை கைதுசெய்ய ஹைகோர்ட் இன்று உத்தரவிட்டது. இவர் 1996ம் ஆண்டு பேட்ச் கர்நாடக ஐபிஎஸ் அதிகாரியாகும்.












Click it and Unblock the Notifications