மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்த தமிழக அரசு! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
சென்னை: மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு மேலும் ஒரு முயற்சியை எடுத்திருக்கிறது. அதன்படி விளையாட்டு போட்டிகள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளன.
அதாவது பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை சக மாணவர்களும், ஆசிரியர்களும் உறுதி செய்கின்றனர். ஆனால், கல்வி நிகழ்ச்சிகளுக்காகவோ, அல்லது விளையாட்டு போட்டிகளுக்காகவோ வெளி ஊருக்கு செல்லும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது.

இது தொடர்பாக பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக அரசு இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.
இதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "பள்ளி விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பான சூழலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; ஒவ்வொரு விளையாட்டு அமைப்பிலும் ஒரு பாதுகாப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்; தனிப்பட்ட மற்றும் ரகசியமாக புகார்கள் பெற்று நடவடிக்கை எடுக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும்; மாணவிகளும் மற்றும் வீராங்கனைகள் அல்லது பெற்றோர் எளிதாக புகார் செய்யக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இது தொடர்பாக எந்த புகார் வந்தாலும் தாமதமின்றி விசாரணை நடத்தி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்; பயிற்சி மற்றும் போட்டி இடங்களில் தனித்தனியாக உடை மாற்றும் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்; அழைத்து செல்லப்படும் மாணவிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்; பயிற்சி மேற்கொள்ளும் பொழுது மாணவிகளை வீடியோ எடுக்கக் கூடாது" என வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சமீப காலங்களாக டெக்னாலஜி சார்ந்த குற்றங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக கழிவறைகளிலும், உடை மாற்றும் அறைகளிலும் ரகசிய கேமராக்களை வைத்து வீடியோ எடுத்து அதை இணையத்தில் உலவ விடும் சம்பவங்கள் குறித்த புகார்கள் அதிகம் குவிய தொடங்கியுள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர் ராமேஸ்வரத்தில் தீர்த்த கடலை ஒட்டியுள்ள குளியல் மற்றும் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்து. அதேபோல கன்னியாகுமரியில் வீட்டின் குளியலறையில் ரகசிய கேமரா வைத்திருந்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவ்வளவு ஏன் ஓரிரு நாட்களுக்கு முன்னர் கூட இதுபோன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருந்தது. பிரபல ஐடி நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
ஆக இப்படியான டெக்னாலஜி சார்ந்த குற்றங்களை தடுப்பது மிகவும் முக்கியமானதாகும். இதற்கான நடவடிக்கையைதான் தமிழக அரசு எடுத்திருக்கிறது. அரசின் இந்த முயற்சிக்கு பொதுமக்களும், கல்வியாளர்களும், மாணவிகளும் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications