94-வது பிறந்த நாள்-சமூக நீதி காவலர் விபி சிங் வழிநடப்போம்-முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் உறுதி
சென்னை: சமூக நீதிக் காவலர் என்றும் 'மண்டல் நாயகர்' என்றும் இந்திய அரசியல் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள மகத்தான மாமனிதர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள் இன்று. ஒடுக்கப்பட்ட மக்கள் தலைவராக திகழ்ந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாளில் அவரது நினைவைப் போற்றுவதுடன் அவரது வழியில் சமூகநீதிக் காத்திட உறுதியேற்போம் என தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரச பரம்பரையில் பிறந்து காங்கிரஸ் பேரியக்கத்தில் உச்சபதவிகளைத் தொட்டவர் வி.பி.சிங். 1980களில் காங்கிரஸுக்கு எதிராக அவர் கலகம் எழுப்பி ஜனதா தளம் கட்சியைத் தொடங்கிய போது இந்திய அரசியல் சரித்திரமும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது. இந்திய அரசியலில் வலிமையான மாநில கட்சிகளை உள்ளடக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்பட்டு மத்தியில் ஆட்சி அமைத்தது. பிரதமர் விபி சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசுதான், இந்த நாட்டின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் நிறுவனங்களில் கல்வி, வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இதற்கான பரிந்துரைகளை வழங்கிய மண்டல் கமிஷன் அறிக்கைகளை அமல்படுத்தியதால் சரித்திரம் அவரை 'மண்டல் நாயகர்' 'சமூக நீதி காவலர்' என போற்றுகிறது.

சமூக நீதியின் தாய்நிலமான தமிழ்நாட்டுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த மகத்தான மாந்தநேயர் விபிசிங். தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பயணித்தவர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஆந்திரா முன்னாள் முதல்வர் என்டி ராமாராவ் என தென்னிந்திய தலைவர்களுடன் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தியவர்.
தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் மாமனிதர் வி.பி.சிங்குக்கு சிலை அமைத்து சிறப்பும் செய்திருக்கிறார். இன்று மக்களின் தலைவர் விபிசிங்கின் 94-வது பிறந்தாள்.

சென்னையில் விபி சிங் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து சிறப்புச் செய்தார். தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு இயகத்தினர் சமூக நீதிக் காவலர் விபி சிங் பிறந்த நாளை முன்னிட்டு செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.
நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி எம்பி: பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டுத் தந்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று. இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில், அவரது பெயர் என்றும் நிலைத்து நிற்கும். கோடிக்கணக்கானவர்களின் வாழ்வில் ஒளியூட்டிய அவரது பணிகள் என்றும் போற்றப்படும். அவர் வழியில் சமூகநீதிக் காத்திட உறுதியேற்போம்.

தென்சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்: பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி, 'சமூக நீதிக் காவலர்' என முத்தமிழ் அறிஞர் கலைஞரால் அன்போடு போற்றப்பட்ட திரு.வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது நினைவைப் போற்றி வணங்குவோம். வாழ்க திரு. வி.பி.சிங்! வெல்க சமூக நீதி !

பாமக சட்டசபை குழுத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ: த்திய அரசு வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (O.B.C)க்கு 27% இட ஒதுக்கீடு வழங்கி இந்திய வரலாற்றில் செயற்கரிய சாதனை படைத்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 94 ஆவது பிறந்த நாள் இன்று. அவரைப் போற்றுவோம். இந்திய நாட்டு மக்கள் அவரை மறக்க முடியாது. மறக்கக்கூடாது. சமூகநீதியை உயிர்மூச்சுக் கொள்கையாகக் கொண்டிருக்கும் மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.கவும் என்றும் அவரை மறவோம். அவரைப் போற்றுவோம்! பா.ம.க மாநாட்டில் வி.பி.சிங் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தது மறக்க முடியாத நிகழ்வு. என் மனதில் இன்றும் நிழலாடுகிறது. மக்கள் தொகை அடிப்படையிலான இட ஒதுக்கீடு கிடைக்க இந்நாளில் உறுதியேற்போம்!












Click it and Unblock the Notifications