35 ஆண்டாக கான்ஸ்டபிளாக இருக்கீங்களா? விஆர்எஸ் வாங்க போறீங்களா? குட் நியூஸ் வெயிட்டிங்!
சென்னை: தமிழக காவல் துறையில் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் பணியைத் தொடர விரும்பாத பல போலீஸார், விருப்ப ஓய்வு பெறுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு சர்பிரைஸ் பரிசை அவர்களுக்கு கொடுக்கவுள்ளது. இதனால் அவர்கள் விருப்ப ஓய்வு பெறாமல் ஓய்வு பெறும் வயது வரை முழுமையாக பணி செய்வர் என சொல்லப்படுகிறது.
தமிழக காவல் துறையில் கடந்த 2006- 2011 ஆம் ஆண்டு 2ஆம் நிலை காவலர்களாகப் பணியில் சேர்ந்தவர்கள், முதல் நிலை காவலர் மற்றும் 15ஆம் ஆண்டில் தலைமைக் காவலராகவும் 25 ஆம் ஆண்டில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கி ஊதியமும் உயர்த்தப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.

அது போல் போலீஸார் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிக்கவுள்ளதாக தெரிகிறது. அதாவது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58-இல் இருந்து 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பணியைத் தொடர விரும்பாத பல போலீஸார் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பிக்கிறார்கள். இதனால் தமிழக காவல் துறையில் காவலர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இந்த நிலையில் காவலர்கள் விருப்ப ஓய்வு பெறுவதை தடுக்கும் வகையில், காவலர்களாக பணியில் சேர்ந்து 35 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு சிறப்பு இன்ஸ்பெக்டர் பதவி வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸ் டிஜிபி, கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதல்வர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 35 ஆண்டுகள் பணிக்காலம் நிறைவு செய்த காவலர்களின் பட்டியலை அனுப்ப அந்தந்த மாவட்ட எஸ்பிக்களுக்கு தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார். அந்த பட்டியலின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 60 க்கு மேற்பட்டவர்கள் காவலர்களாக 35 ஆண்டுகளுக்கும் மேலாக பணிச் செய்து வருகிறார்கள்.
அப்படி பார்த்தால் குறைந்தது 2000 போலீஸார் வரை பட்டியலில் உள்ளார்கள். இவர்களுக்கு சிறப்பு இன்ஸ்பெக்டர் பதவியை வழங்கி, ஊதியத்தையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனை அரசல் புரசலாக கேள்விப்பட்ட போலீஸார் விருப்ப ஓய்வு பெறும் முடிவை கைவிட்டு வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications