10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்.. மார்ச் 26இல் பொதுத்தேர்வு
சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. இதை மாநிலத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
தமிழகத்தில் இந்தாண்டிற்கான 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்குள் தேர்வை நடத்தி முடிக்கப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள பிளஸ் 2 மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை வரை நடைபெறும் நிலையில், பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரையும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 6 வரையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் மாணவர்கள் தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறார்கள். பொதுத்தேர்வுடன் செய்முறை தேர்வுகளும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்குகிறது.
ஏற்கனவே கடந்த வாரம் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கிய நிலையில், இன்று 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் நடைபெற்று வருகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் பாடம் வாரியாக செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.
செய்முறைத் தேர்வுக்கான முகப்பு தாள்கள் மற்றும் படிவங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் 29ஆம் தேதி வரை வரை இந்த செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. ஒரு சுற்றுக்கு 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை விரைவாக முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வைத் தொடர்ந்து வரும் பொதுத்தேர்வுகள் நடக்க உள்ள நிலையில், மே மாதம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.












Click it and Unblock the Notifications