டாஸ்மாக்குக்கு டஃப் கொடுத்த பத்திரப்பதிவு! ஒரே நாளில் 302 கோடி வருவாய்! பதிவு துறை வரலாற்றுச் சாதனை
சென்னை: தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை நேற்று நிகழ்ந்தது. ஐப்படி கடைசி முகூர்த்தத்தை முன்னிட்டு நேற்றி அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் மக்கள் அதிக அளவில் பத்திரங்களை பதிவு செய்ததால், ஒரே நாளில் அரசு ரூ.302 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மக்கள் பெரும்பாலும் சுபமுகூர்த்த நாட்களில் வீடு, நிலம், செட்டில்மென்ட், தானம், கிரயம் போன்ற பத்திரங்களை பதிவு செய்வது வழக்கம். அதற்கேற்ப, நேற்றும் வளர்பிறை முகூர்த்தம் என்பதால் பதிவுத்துறை அலுவலகங்களில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்தது.
பொதுமக்களின் வசதிக்காக, அனைத்து அலுவலகங்களிலும் வழக்கத்தை விட கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டன. ஒரு சார்பு பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பு பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்பட்டன.

மேலும் அதிக பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு, 100 சாதாரண டோக்கன்களுக்கு கூடுதலாக 150 வரை ஒதுக்கப்பட்டது. தட்கல் டோக்கன்களும் 12இலிருந்து 16ஆக அதிகரிக்கப்பட்டன.இந்த கூடுதல் வசதிகளால் மக்கள் தாமதம் இல்லாமல் ஆவணங்களை பதிவு செய்தனர். இதன் விளைவாக ஒரு நாளில் பதிவுத்துறைக்கு கிடைத்த வருவாய் ₹302 கோடியாக உயர்ந்தது.
இது தமிழக பதிவுத்துறையின் வரலாற்றில் புதிய சாதனையாகும். பதிவுத்துறை மூலம் வீடு-நிலம் வாங்கும் போது அல்லது குத்தகை, கட்டுமான ஒப்பந்தம் போன்ற ஆவணங்களை பதிவு செய்யும்போது முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணங்களே அரசின் முக்கிய வருவாய் வழிகளில் ஒன்றாக உள்ளன.
நேற்று நடந்த முகூர்த்த நாளில் பெருமளவில் மக்கள் பங்கேற்றதால், வருவாய் பல மடங்கு அதிகரித்தது. நேற்று நடந்த முகூர்த்த நாளில் மாநிலம் முழுவதும் பதிவுத்துறை அலுவலகங்கள் சிறப்பாக செயல்பட்டு, ஒரே நாளில் ரூ.302 கோடி வருவாய் ஈட்டியுள்ளன.
இது பதிவுத்துறையின் பெரிய சாதனை என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். முகூர்த்த நாட்களில் பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்குவது தொடர்ந்தும் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications