பாஜகவுக்கு கடைக்கோடியில் 2.. கொங்கு மண்டலத்தில் 2.. இது ஏதாவது குறியீடா?
சென்னை: தமிழகத்தில் ஒரு வழியாக மலர்ந்து விட்டது தாமரை.. பெரிய அளவில் பூத்து புஷ்பிக்காவிட்டாலும் கூட நான்கு இடங்களில் பாஜக வுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
Recommended Video
தமிழகம் எப்போதுமே தேசியக் கட்சிகளுக்கு தனித்து ஆதரவு கொடுத்ததில்லை. அதைத்தான் இந்த தேர்தலும் நிரூபித்துள்ளது. திராவிடக் கட்சிகளைத் தாண்டி , தமிழ் தேசியத்துக்குக் கூட தமிழகம் இன்னும் ஆதரவு கொடுக்க முன்வராத நிலைதான் காணப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகப் பெரிய நம்பிக்கையுடன் பாஜக இந்த முறை களம் கண்டது. அது போன வேகத்தைப் பார்த்து பலரும் மிரண்டனர், அரண்டனர். ஒரு வேளை பாஜக பெரிய லெவலில் ஜெயித்து விடுமோ என்று சிலர் அஞ்சக் கூட செய்தனர்.

கடைசியில் 4
சட்டசபைத் தேர்தலில் எடுத்த எடுப்பில் பாஜகவுக்கு சில தொகுதிகளில் லீடு கூட கிடைத்தது. 6 தொகுதிகள் வரை அது லீட் எடுத்தது. இதனால் பாஜகவுக்கு பெரிய வெற்றி கிடைக்கப் போவதாக கருதப்பட்டது. ஆனால் நேரம் செல்லச் செல்ல அது 3 தொகுதியாக சுருங்கி பின்னர் நான்காக விரிவடைந்து, கடைசியில் அதே நான்குடன் நின்று போனது.

நல்ல வெற்றிதான்
உண்மையில் பாஜகவைப் பொறுத்தவரை நிச்சயம் இது பெரிய வெற்றிதான். சந்தேகமே தேவையில்லை. ஒன்றுமே இல்லாமல், நோட்டாவுடன் பல வருடமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள், திமுக கூட்டணியுடன் மிக பலமாக மோதியுள்ளனர். என்னதான் அதிமுக இவர்களின் முழு பலத்துக்குக் காரணம் என்றாலும் கூட அதிமுக, திமுகவுக்கு இணையாக பாஜகவும் ஹார்ட் ஒர்க் செய்தது என்பதை மறுக்க முடியாது.

2 மண்டலங்களில்
ஆனால் அவர்களுக்குக் கிடைத்த வெற்றிதான் ரொம்ப வித்தியாசமாக உள்ளது. தமிழகத்தில் பல மண்டலங்கள் இருந்தாலும் கூட வெறும் 2 மண்டலங்களில் மட்டுமே அவர்களால் வெல்ல முடிந்திருக்கிறது. மேற்கு மண்டலத்தில் 2 தொகுதிகளில் வென்றுள்ளனர். அதேபோல தென்கோடி தெற்கு மண்டலத்தில் 2 தொகுதிகளில் வென்றுள்ளனர்.

நெல்லையில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலிலும், நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலியிலும் பாஜகவுக்கு இரண்டு வெற்றிகள் கிடைத்துள்ளன. அதில் நாகர்கோவிலில் வென்ற காந்திக்கு உள்ளூரில் நல்ல பெயர் உள்ளது. அப்பழுக்கற்ற சேவையாளர், திருமணம் கூட செய்து கொள்ளாமல் மக்கள் சேவையில் ஈடுபட்டிருப்பவர், அதிர்ந்து பேசாதவர் என நிறைய பிளஸ்கள் உள்ளன.

திராவிட நாகேந்திரன்
நெல்லையில் வென்ற நயினார் நாகேந்திரன் திராவிட பாரம்பரியத்திலிருந்து தேசியத்திற்கு வந்தவர். எனவே அந்தப் பின்னணி அவருக்கு மிகப் பெரிய அளவில் உதவியது. ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கே மிக நெருக்கமான வட்டத்தில் இருந்தவர் நயினார். எனவே அவரது வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.

மேற்கு மண்டலம்
மேற்கு மண்டலத்தில் வானதிதான் மிகக் கடுமையாக போராட வேண்டியதாகி விட்டது. முதலில் காங்கிரஸுடன் போராடினார். பின்னர் கமலுடன் போராடினார். ஒரு கட்டத்தில் 3வது இடத்திலும் இருந்தார். தட்டுத் தடுமாறி கடுமையான மோதலுக்குப் பின்னர்தான் சொற்ப வாக்குகளில் அவர் வென்றுள்ளார். அதேபோலத்தான் மொடக்குறிச்சி தொகுதியிலும் சரஸ்வதி, கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் வென்று வந்துள்ளார்.

ஏன் 2 மட்டும்
பாஜகவுக்கு 2 மண்டலங்களில் மட்டும் தமிழகம் இடம் கொடுத்துள்ளது. இது ஏதாவது குறியீடா என்ற கேள்வியும் எழுகிறது. வரும் காலத்தில் பாஜகவின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. குறிப்பாக வானதி சீனிவாசனின் செயல்பாடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நகர்ப்புற கட்சியா
இன்னொரு சுவாரஸ்யமும் இந்த நான்கு தொகுதிகளில் அடங்கியுள்ளது. பாஜக வென்றுள்ள நான்கு தொகுதிகளில் நெல்லை, கோவை கிழக்கு, நாகர்கோவில் ஆகிய மூன்றுமே மாநகராட்சி தொகுதிகள் ஆகும். இது பாஜகவை நகர்ப்புற மக்கள் அதிகம் விரும்புகிறார்களோ என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையும் போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications