தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு! இலவச பாடப்புத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடு
சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றைய தினம் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. அது போல் 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையும், 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையும் இறுதித் தேர்வுகள் நடந்தன.

இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதற்கான வளாகப் பராமரிப்பு, நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
புதிய கட்டணமில்லா பேருந்து அட்டைகள் வழங்கப்படும் வரை மாணவர்கள் பழைய அட்டையை கொண்டு பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியது. இதனிடையே பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, அட்டவணை உயர்கல்வி வழிகாட்டி முகாம் உள்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய 2025- 2026 ஆம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை விரைவில் வெளியிடுகிறது.
இன்று பள்ளி திறப்புக்காக நேற்றே பல்வேறு பள்ளிகளில் வகுப்பறைகள் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன.












Click it and Unblock the Notifications